
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா, சின்னக்காமன் பட்டியில் செயல்பட்டு வரும் கோகுலேஸ் பட்டாசு தொழிற்சாலையில் அதிகாலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தினால் ஆலையில் உள்ள 8 அறைகள் வெடித்து தரைமட்டமானது. வெடி விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்.
சிவகாசியைச் சேர்ந்த கமல் குமார் என்பவருக்கு சொந்தமான கோகுலேஸ் பட்டாசு தொழிற்சாலை சின்னக்காமன்பட்டி பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலை நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையின் உரிமம் பெற்றது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 20க்கும் மேற்பட்ட அறைகளில் 50க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை வழக்கம்போல் பணி செய்ய தொடங்கிய நிலையில் மருந்து கலவை செய்யும் அறையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வெடிவிபத்தினால் 8 அறைகள் தரைமட்டமாகின. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி மற்றும் சாத்தூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மீட்பு பணியின் போது இந்த வெடி விபத்தில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது. உயிரிழந்தவர்களில் 2 பெண்கள், 5 ஆண்கள், எனவும் மீனாம்பட்டியை சேர்ந்த ராமசாமி மகன் மகாலிங்கம் (55) என்பவரது உடல் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் விபத்தில் காயமடைந்த ஓ.கோவில்பட்டியை சேர்ந்த ராமமூர்த்தி (45), செவல்பட்டியை சேர்ந்த லிங்குசாமி (45) உட்பட 5 பேர் ஆகிய மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கட்டட இடிப்பாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளனரா என்று மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஓ.கோவில்பட்டியை சேர்ந்த போர்மேன் ரவி மற்றும் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.