
மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளதால், காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு விநாடிக்கு 48,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து, அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் மேட்டூர்அணை நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு முழு கொள்ளளவான 120 அடியை 44-வது தடவையாக எட்டியது. தொடர்ந்து, அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 57,732 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 58,000 கனஅடியாக அதிகரித்து. ஆனால், நேற்று மதியம் 48,000 கனஅடியாக குறைந்தது.