
சென்னை: காவல் துறையினர் முழுமையாக செயல்பட சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டம் ஒழுங்கை பேணிப்பாதுகாத்து, நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் முக்கியப் பிரச்சினைகளில் காவல்துறை உயர் அலுவலர்கள் ஊடகங்களுக்கு தெளிவாக விளக்கமளித்து வதந்திகள் பரவுவதை தடுக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில், முதல்வர் தலைமையில் சட்டம்- ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தலைமைச் செயலர், டிஜிபி உள்ளிட்ட காவல்துறை உயர் அலுவலர்களுடன் ஆலோசித்தார். அப்போது மண்டல காவல்துறை ஐஜி-க்கள் தங்கள் மண்டலங்களில் குற்றத்தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து விளக்கினர்.