
சென்னை: தமிழகத்தில் அனைத்து வீட்டு மின் இணைப்புகள், குடிசை மற்றும் குறுந்தொழில் நுகர்வோர்கள், விசைத்தறி நுகர்வோர்கள், 50 கிலோ வாட் வரை உள்ள தாழ்வழுத்த தொழிற்சாலைகள் மற்றும் 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறு வணிகர்களுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை. இதன்மூலம் 2.83 கோடி மின் நுகர்வோர்கள் பயனடைவார்கள். மேலும், தற்போது உள்ள அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அரசின் செய்திக் குறிப்பு: மின்சார வாரியங்களின் நிதி நிலைமை சீராக இருப்பதற்காக அந்தந்த மாநிலங்களின் ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்பொழுது மின் கட்டணத்தில் மாற்றம் செய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பல்லாண்டு மின் கட்டண உயர்வை அறிவித்து ஆண்டுதோறும் நுகர்வோர் விலைக்குறியீட்டு அடிப்படையில் மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தை மாற்றி அமைத்து ஆணை வெளியிடுகிறது.