
பீகாரில் ரூ. 100 கோடி மதிப்பிலான சாலை விரிவாக்க திட்டத்தின் ஒருபகுதியாக மாவட்ட நிர்வாகம், தலைநகர் பாட்னாவிலிருந்து 50 கி.மீ தொலைவிலுள்ள ஜெகனாபாத்தில் சாலையின் நடுவே உள்ள விபத்து ஏற்படும் வகையில் இருக்கும் மரங்களை அப்படியே விட்டுவிட்டு சாலை விரிவாக்கம் செய்து 7.48 கி.மீ தொலைவுக்கு சாலை போட்டிருப்பது விமர்சனத்துக்குள்ளாகிறது.
இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் சாலை விரிவாக்கம் செய்வதற்கு முன்பாக, சாலையின் நடுவிலிருக்கும் மரங்களை அகற்ற உரிய அனுமதி பெறுவதற்காக வனத்துறையை மாவட்ட நிர்வாகம் அணுகியது.
அப்போது வனத்துறை அதற்கு ஈடாக 14 ஹெக்டேர் நிலத்துக்கான இழப்பீட்டைக் கோரியது.
மாவட்ட நிர்வாகத்தால் வனத்துறை கேட்ட இழப்பீட்டைத் தர முடியாததால், மரங்களை வெட்டுவதற்கான அனுமதியும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
இதனால், மாவட்ட நிர்வாகம் அந்த மரங்களை அப்படியே விட்டுவிட்டு சாலை போட்டிருக்கிறது.
பாட்னா-கயா பிரதான சாலையில் போடப்பட்டிருக்கும் இந்த 7.48 கி.மீ சாலை நெடுகிலும் நடுவே மரங்கள் இருக்கின்றன.

அதுவும், மரங்கள் ஒரே நேர்கோட்டில் இருந்தால்கூட கொஞ்சம் விபத்து நடைபெறாமல் இருக்க வாய்ப்பிருக்கிறது.
அதுவுமேகூட ஆபத்துதான். ஆனால், இந்தச் சாலையில் மரங்கள் குறுக்கு மறுக்காக இருக்கிறது.
இதனால், வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கிடையிலான பிரச்னையில் வாகன ஓட்டிகளின் உயிருடன் விளையாடும் வகையில் சாலை போடுவதா என பலரும் கேள்வியெழுப்பிவருகின்றனர்.
ஆனாலும், வனத்துறையோ அல்லது மாவட்ட நிர்வாகமோ இதுவரையில் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அந்த மரங்களை அகற்ற முன்வரவில்லை.