• June 30, 2025
  • NewsEditor
  • 0

நீலகிரி மாவட்டம், குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட மஞ்சூரை அடுத்து தொட்டக்கொம்பை, பாரதிநகர், சேரனூர் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. ஏழை எளிய மக்கள் வாழ்ந்து வரும் இந்த பகுதியில் முறையான மயானம் கிடையாது என்பதால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இறந்தவர்களின் உடல்களை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 300- க்கும் அதிகமான குடும்பங்கள் உள்ள இந்த பகுதியில் வருவாய்த்துறை மூலம் முறையான மயானம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

இந்திரகுமார்

இந்த நிலையில், பிக்கட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் இருப்பதாகவும், அதனை ஆய்வு செய்து மயானத்திற்கு ஒதுக்கீடு செய்துத் தருமாறு‌ம் தொட்டகொம்பை கிராமத்தைச் சேர்ந்த இந்திரகுமார் என்பவர், முதலமைச்சரின் முகவரித் துறைக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

சம்பந்தப்பட்ட மனு மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சரின் முகவரித் துறையில் இருந்து பிக்கட்டி பேரூராட்சி நிர்வாகத்திற்கு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆய்வு மேற்கொண்டதாக கூறிய பிக்கட்டி பேரூராட்சி நிர்வாகம், ‘ தாங்கள் இலவச வீடு கட்டித் தர கோரி மனு அளித்துள்ளதைத் தொடர்ந்து நேரடியாக விசாரித்ததில் தங்களுக்கு சொந்தமாக பட்டா இல்லை. மேலும், இலவசமாக வீடு கட்டி கொடுக்கும் திட்டங்கள் ஏதும் பேரூராட்சி நடைமுறையில் இல்லை. எனவே தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினை அணுகவும்’ என

தொடர்பே இல்லாத பதிலை மனுதாரருக்கு அனுப்பியுள்ளனர்.

இதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார் மனுதாரர் இந்திரகுமார்.

குதர்க்கமான‌ பதில்

இது குறித்து பேசிய அவர் , “சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்கக் கோரி அளித்த விண்ணப்பத்திற்கு, என்னிடம் எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல்,‌ வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் ஏதும் இல்லை என குதர்க்கமான பதிலை சொல்லி கடிதம் கொடுத்திருக்கிறார்கள். அதிகாரிகளின் இந்த அலட்சிய பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு புகார் அனுப்ப இருக்கிறேன் ” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *