
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது,
“நான் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன். கடந்த 29.6.2025-ம் தேதி என்னுடைய 8 வயது மகள் விளையாட சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அதனால் அவரை நாங்கள் தேடிக்கொண்டிருந்தபோது என் மகளின் தோழி ஒருவர், அந்தப் பகுதியில் உள்ள வீட்டில் என் மகள் விளையாட சென்றிருக்கலாம் என்று என்னிடம் தெரிவித்தார். அதனால் என் மகளின் தோழி கூறிய வீட்டுக்குச் சென்று நானும் என்னுடைய அப்பாவும் என் மகள் குறித்து விசாரித்தோம். அப்போது அந்த வீட்டிலிருந்து 4 பெண்கள், ஒரு ஆண் வெளியில் வந்தனர். அந்த ஆண், தான் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றுவதாகவும் என் மகளை அனுப்ப முடியாது. இங்கிருந்து உடனடியாக நீ செல். இல்லையெனில் இப்போதே எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உன்னை சிறையில் அடைத்து விடுவேன்’ என்று மிரட்டினார்.
அடுத்த சில நிமிடத்தில் நுங்கம்பாக்கம் போலீஸார் அங்கு வந்தனர். அதில் காவலர் ஒருவர், என்னையும் என்னுடன் இருந்த என் அப்பாவையும் காவல் வாகனத்தில் ஏற்ற முயன்றார். சுதாரித்துக் கொண்ட நான், என்னுடைய தம்பி, நண்பர்களுக்கு போனில் தகவல் கொடுத்தேன். அப்போது போலீஸார், எங்களுக்கு எதிராகவும் செயல்பட்டனர். ஆனால் என் மகளை அனுப்ப முடியாது என்று கூறியவர்களுக்கு ஆதரவாக பேசினர். இந்தச் சமயத்தில் என் மகளை அங்கிருந்து மீட்டு அவரிடம் என்ன நடந்தது என்று கேட்டேன். அப்போது அரைமயக்கத்திலிருந்த என் மகள், என்னிடம் காவலர் என்று கூறியவர், தன்னுடைய கையில் ஊசி போட்டார். உடல் முழுவதும் வலிப்பதாக கூறினாள். இதையடுத்து அவளை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அவளை பரிசோதித்த டாக்டர்கள், என் மகள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகியிருப்பதாக எங்களிடம் தெரிவித்தனர். எனவே சம்பந்தப்பட்ட காவலர் உள்பட அனைவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் புகாரின் பேரில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுமி தரப்பில் பத்திரிகையாளர்களிடம் பேசியவர்கள், “சிறுமியை மீட்க சென்ற வீட்டிலிருந்தவர்கள் சிறுமியின் அப்பாவையும் தாத்தாவையும் தாக்கியிருக்கிறார்கள். அதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டுகிறார்கள். சிறுமியிடம் விசாரித்தபோது அவர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகியிருப்பதாக சொல்கிறார். போக்சோ வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் நுங்கம்பாக்கம் போலீஸார் அலைக்கழித்து வருகின்றனர். சிறுமியின் தாத்தா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறார். அதனால் மருத்துவமனையிலிருந்தே நுங்கம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர அதே மருத்துவமனையில் சிகிச்சையிலிருக்கும் சிறுமியும் தனக்கு நடந்த கொடுமைகளை தெளிவாக கூறியிருக்கிறார். அதன்பிறகும் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் சிறுமியின் குடும்பத்தினரை மிரட்டும் தொனியில் விசாரித்து வருகிறார்கள். இதற்கு காரணம் சிறுமியை பாலியல் தொல்லைக்குட்படுத்தியவர், எஸ்.ஐ-யாக இருக்கிறார். அவருக்கும் சிறுமியின் குடும்பத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. சம்பவத்தன்று அந்த போலீஸ் எஸ்.ஐ, போதையிலிருந்தார். சிறுமியை அழைத்துச் சென்ற வீட்டின் அருகில் சிசிடிவி-க்கள் இருக்கின்றன. அதை ஆய்வு செய்தாலே என்ன நடந்தது என்று தெரியவரும். தற்போது போலீஸார், சிறுமியின் அப்பா மீதே குற்றம் சாட்டுகிறார்கள். பாதிக்கப்பட்ட எங்களுக்கு எதிராக காவல்துறையினர் செயல்படுகிறார்கள். எனவே நுங்கம்பாக்கம் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உயரதிகாரிகளிடம் புகார் கொடுப்போம்” என்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு , “சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டாரா என மருத்துவ ரிப்போர்ட் இதுவரை எங்களுக்கு வரவில்லை. அதே நேரத்தில் சிறுமியை அழைத்துச் சென்றவர்களிடம் விசாரித்தபோது சிறுமியின் அப்பாதான் மகளிடம் தவறாக நடந்ததாகவும் அதனால்தான் சிறுமியை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்க இருந்ததாகவும் தெரிவிக்கிறார்கள். ஆனால் சிறுமியின் அப்பாவும் தாத்தாவும் சிறுமியை மீட்டவர்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். அதனால் இரண்டு தரப்பிலும் விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதால் சிறுமியிடம் குழந்தைகள் நலக்குழு விசாரித்து தரும் ரிப்போர்ட் அடிப்படையில் போலீஸார் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பார்கள்” என்றார்.