• June 30, 2025
  • NewsEditor
  • 0

“தமிழகத்தில் நடப்பது ஜனநாயக ஆட்சியா? இல்லை, காட்டுமிராண்டி ஆட்சியா?” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுள்ளார்.

திருப்புவனம் லாக்கப் டெத் – உயிரிழந்த இளைஞர் அஜித்குமார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமன்றி நீதி கேட்டு தேசிய அளவில் டிரெண்டிங்காகி உள்ளது. இன்றைக்கு திமுக ஆட்சியில் இருப்பது காவல் நிலையமா? கொலை நிலையமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசு இது குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை, ஸ்டாலின் பதில் சொல்ல முன்வரவில்லை. ஸ்டாலின் ஆட்சியில் வரி உயர்வு போல லாக் கப் மரணங்களும் உயர்ந்து வருகிறது. தேசிய மனித உரிமை ஆணையம் லாக் அப் மரணத்தில் தென் மாநிலங்களில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது என்று கூறியுள்ளது

2021 ஆகஸ்டில் தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் சத்தியவான், 2021 செப்டம்பரில் பராமத்தி வேலூரில் மணிகண்டன், 2021 டிசம்பரில் ராமநாதபுரத்தில் மணிகண்டன், 2022 பிப்ரவரியில் நெல்லையில் சுலைமான், 2022 ஏப்ரலில் சென்னையில் விக்னேஷ், 2022 ஏப்ரலில் திருவண்ணாமலையில் தங்கமணி, 2022 ஜூனில் பழைய கொடுங்கையூர் அப்பு என்று இதுவரை 25 லாக் அப் மரணங்கள் என தொடர்கிறது.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

அரசு வேடிக்கை பார்க்கிறதா? ஸ்டாலினுக்கு நிர்வாகம் செய்யத் தெரியவில்லையா? காவல்துறையை வழிநடத்த தெரியவில்லையா? இதே காவல்துறை ஜெயலலிதா ஆட்சியில் ஸ்காட்லாந்துக்கு நிகராக இருந்தது.

வேடசந்தூரில் நடந்த அரசு விழாவில் ஜெயலலிதாவின் படம் குப்பைத் தொட்டியில் போடப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது, இந்த ஆட்சியை குப்பைத் தொட்டியில் தூக்கி வீசும் நாள் வெகு தொலைவில் இல்லை

பூஜை அறையில் வைக்க வேண்டிய ஜெயலலிதா படத்தை குப்பைத்தொட்டியில் போட்டதைக் கண்டு 8 கோடி மக்களும் வேதனை அடைந்துள்ளனர். இதற்கு ஜெயலலிதா பேரவை சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜெயலலிதாவின் திட்டங்களை சாக்கு போக்கு சொல்லி நிறுத்தியது மட்டுமல்லாமல், இப்போது அவர் படத்தையும் குப்பைத்தொட்டியில் வீசியதை பார்த்து எங்களுக்கு ரத்தம் கொதிக்கிறது. இது குறித்து எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அரசு இதைக் கண்டும் காணாமல் இருப்பது வேதனையின் உச்சமாக இருக்கிறது, தெய்வம் நிச்சயம் உங்களை தண்டிக்கும்.

மக்கள் தொண்டே, மகேசன் தொண்டு என்று மக்களுக்காக வாழ்ந்த ஜெயலலிதாவின் படத்தை குப்பைத்தொட்டில் போட்ட கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விட்டால் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவைப் பெற்று மாநிலம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *