
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
சுற்றுலா செல்ல சிறந்த நேரம் காலம் எது ?. பல விஷயங்கள் நம் கையில் இல்லை தான் என்றாலும் நான் சொல்வதைக் கேட்டால், உங்கள் பயணம் சுகவாசம் தான். சனி, ஞாயிறு, பண்டிகை விடுமுறை, தொடர் விடுமுறை நாட்கள் தவிர்த்தால் பல சிக்கல்களைத் தவிர்க்கலாம். பருவத்தே பயிர் செய் என்பார்கள் அல்லவா ?.
எனக்குத் தெரிந்த நண்பர் குடும்பம், தசரா சமயம் ரயில் பதிவு செய்து விட்டு ‘ரூம் மற்றும் சுற்றிப் பார்க்க டாக்ஸி’ புக் செய்ய என்னிடம் கேட்டார்கள். அது லேசுப்பட்டக் காரியமாகத் தெரியவில்லை.
தசரா நேரம் சிட்டியில் எல்லாம் ஃபுல் . எப்படியோ கஷ்டப்பட்டு ஊருக்கு தள்ளியே உணவுக்கூடம் இல்லாத தங்கும் விடுதி மட்டும் கிடைத்தது. ஜூ-க்கு போனால் எல்லாம் மனிதத் தலைகள் தான் தெரிந்தனவாம்.
அரண்மனையிலும் செம கூட்டம். போட்டோ எடுத்தால் நம் கூடப் பக்கத்தில் ஒரு பட்டாளமே இருக்கும். பிருந்தாவன் கார்டன்-க்கு 1 கி.மீ முன்னால தான் வண்டியைப் பார்க் செய்ய முடிந்தது . உங்கள் நோக்கம் வெறும் இடங்களைப் பார்ப்பது என்றால் பராவாயில்லை. நிதானமாக ரசித்துப் பார்க்க வேண்டும் என்றால், சந்தடி நிறைந்த நாட்களை தெரிவு செய்வது உசிதமல்ல.
மழைக்காலத்தில் தான் என்னால் துவாரகை கண்ணனையும் (2019), பூரி ஜகன்னாதரையும் (2016) தரிசிக்க வழி பிறந்தது. அந்தமான் (2017) செல்லுலார் ஜெயில் பிரவேசம் கூட மழைச்சாரலில் தான் இருந்தது.
ஆளுக்கு ஒரு குடை அல்லது ரெய்ன்கோட் சகிதம் கிளம்பி விட்டோம். கோகுலாஷ்டமி மற்றும் பூரி ரத யாத்திரை நாட்களைத் தவிர்த்து விட்டோம், நல்ல வேளையாக. குறைவான கூட்டம், சில்லென்று காற்று, மழைத்தூறல் அதுவும் ஒரு வித அனுபவம் தான். சளி, காய்ச்சல், இருமல், வயித்துவலி, வயிற்றுப்போக்கு இத்யாதிகளுக்கு கைவசம் மருந்துகள் கண்டிப்பாக வேண்டும்.
பூரி காசி ராமேஸ்வரம் போன்ற மிக பிரசித்திப் பெற்ற தலங்களில் பல்வேறு பெயர்களில் (பண்டா) அழைக்கப்படும் பூஜாரிகளிடம் சிக்காமல் நேரடியாக இறைவனின் அருளைப் பெறுவது உத்தமம்.
சிவனே என்று சிவனை அல்லது கண்ணனை வழிப்பட்டு வந்து விடுங்கள். நமக்கும் துளியூண்டு இந்தி தெரியுமே என்று வாய்க்கொடுத்து மாட்டிக் கொள்ளாதீர்கள். நல்ல கொளுத்தும் வெயில் காலத்தில் தான் உங்களால் ஜெய்ப்பூர் போக முடியும் என்றால் அதற்கேற்றவாறு முன்னேற்பாடுகள் அவசியம்.

பல்வேறு சுற்றுலா தலங்கள் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை இருக்கும். மைசூருவில் ஜூ செவ்வாய், ரெயில் மியூசியம் திங்கள் அன்று மூடப்பட்டிருக்கும். மைசூர் அரண்மனைக்கு வாராந்திர விடுமுறை இல்லை. கோயில்களின் நேரங்களும் வெவ்வேறாக மாறுபட்டிருக்கும்.
தொல்துறை வசமிருக்கும் கோயில்கள் / தலங்கள் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்பதை நினைவு படுத்திக்கொண்டுச் செல்வது உதவும். கூகிள் குருவிடம் எல்லா விவரங்களும் கிடைக்குமென்றாலும் , குறிப்பிட்டத் தலங்களுக்கு சென்று வந்தவர்களின் அனுபவம் தெரிந்து கொள்வது (முடிந்தால்) நல்லது. மிகவும் பயனுள்ள டிப்ஸ் கிடைக்க வாய்ப்புண்டு.
சுமை குறைந்தால் சுகம்:
ட்ரெயின் ஸ்டேஷன், ஏர்போர்ட் போன்றவற்றில் நடை நடையாய் நடக்க வேண்டியிருக்கும். சில சமயம் லிஃப்ட் / நகரும் படிக்கட்டு இருக்காது / வேலை செய்யாது. அதனால், குறைந்த பட்ச லக்கேஜ் இருப்பது உசிதம். மேலும், சுற்றுலா தலங்களில் நம் ஆசைக்கும் பொருட்களை வாங்கிக் குவிப்போம். அதற்கும் நம் லக்கேஜில் இடம் வேண்டுமல்லவா ?. நான் ஒரு முறை திருவனந்தபுரம் போன நாளன்று ஃபுல் பந்த்.
கேரளாவில் பந்த் என்றால் கேட்கவே வேண்டாம். நீங்கள் நடராஜ சேவையை தான் நம்ப வேண்டும். நல்ல வேளை, நான் தங்க வேண்டிய ஹோட்டல் 3 கிமீ தொலைவில் இருந்ததால், என்னுடைய சுமை குறைந்த முதுகுப்பை (backpack ) உடன் சிரமமில்லாமல் ராஜா மாதிரி நடை பயில முடிந்தது. அதற்கு வாய்ப்பளித்த பந்த் அழைப்பார்களுக்கு நன்றி சொன்னேன்.
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு “.

நான் என்னுடைய லக்கேஜ்-யை நானே எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்குச் சென்று கீழே வைத்தேன். பின்னால் என்னைத் தொடர்ந்து வந்த ஒரு யூனியன் பேட்ஜ் ஆசாமி என்னிடம் சுமை கூலி கேட்டான். கேரளாவைப் பற்றி இப்படி ஒரு பழைய ஜோக் உண்டு.
கடைசி நிமிட ஹரி-பரி – பரபரப்பு ஏற்பாடுகள் வேண்டாமே !.
என் மகன் எல்லாவற்றையும் கடைசி நிமிடம் வரை தள்ளி வைப்பான். அமெரிக்காவிலிருந்து வந்த அவன் 3 வாரங்கள் விடுமுறை முடிந்து கிளம்பும் முதல் நாள் தான் பேக்கிங் ஆராம்பித்தான்.
ஏர்போர்ட் கிளம்பும் வரை ஏதோதோ பேக்கிங் மும்முரம். பிளேன் தவறவிடாமல் கிளம்பியதும் தான் எங்களுக்கு நிம்மதி. அடுத்த நாள் எதேச்சையாக அவன் இருந்த ரூமில் நோட்டமிட்டால் ஒரு இடத்தில அவன் கிரிடிட் கார்டு, ட்ரைவிங் லைசென்ஸ், வீட்டுச்சாவி எல்லாம் என்னைப் பார்த்து நகைத்தன. உடனே, வீட்டுச்சாவி மாத்திரம் DHL கூரியரில் அனுப்பி வைத்தோம்.

இன்டர்நேஷனல் பயணம் என்றால் ஏர்போர்ட் சென்றடைய கொஞ்சம் அதிகமாகவே நேரம் வைத்துக் கொள்ளவும். வெளிநாட்டில் நாம் இருக்கும் போது நம் பாஸ்போர்ட் தான் நம் உயிர்.
அது உங்கள் பாக்கெட்டில் இருப்பது உத்தமம். லக்கேஜ் திருட்டுகள் சில ஏர்போர்ட்களில் நடைபெறுவது நம்பித் தான் ஆக வேண்டும் !. அங்கு ஒரு சில சுற்றுலா தலங்களில் கூட நம் பாஸ்போர்ட் சரிப்பார்க்க கேட்கலாம். அமெரிக்காவில் நான் இருந்த இடத்தில் அருகாமையில் உள்ள போர் மியூசியத்தில் (war museum) பாஸ்போர்ட் இல்லாமல் என்னை அனுமதிக்க வில்லை.
கை வசம் திடீர் உணவுகள் :
நாங்கள் குடும்பமாக காசி சுற்றுலா செல்ல முடிவெடுத்தோம் (2024). காசியில் எங்கள் பயணம் ஹோலி தினத்தில் ஆரம்பம். நண்பர்கள் எச்சரித்தார்கள். ‘ஹோலி என்றால் அங்கே எல்லாம் பந்த் மாதிரி இருக்கும். ஒன்றும் கிடைக்காது.
நாங்கள் அதை அவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்ள வில்லை. இருந்தாலும் எச்சரிக்கையாக ஒரு காரியம் செய்தோம். ஆளுக்கு 3 சப்பாத்தி, ஜாம், சாஸ், ஊறுகாய், பிரபல நிறுவனத்தின் திடீர் உப்புமா, அவல், நூடுல்ஸ், (சூடு நீர் சேர்த்து ஒரு 3 நிமிடங்கள் அப்படியே வைத்தால் டிபன் ரெடி), மில்க்-சர்க்கரை-டீ/காஃபி சேர்த்த இன்ஸ்டன்ட் பாக்கெட்கள் எல்லாம் வைத்துக் கொண்டோம்.

நண்பர்கள் சொன்னது போல் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் கூட ரெஸ்டாரண்ட் மூடி இருந்தது. தெருவோர பெட்டிக் கடைகளில் டீ மாத்திரம் கிடைப்பதாக இருந்தது. ஆனால், நாங்கள் எடுத்து சென்ற திடீர் உணவு வகைகள் ரொம்பவும் உதவின எனலாம்.
பெரும்பாலான டீலக்ஸ் ஹோட்டலில் சுடுநீர் தயாரிக்கும் கெட்டில் இருக்கவே, நாமே திடீர் உணவுகளைத் தயாரிக்கலாம். 500 வாட்ஸ் கொண்ட சிறிய கெட்டில் கூட எடுத்துச்செல்லலாம். சுற்றுலாவையே நம்பி இருக்கும் தலங்களில் (அந்தமான், கோவா, காஷ்மீர், போன்றவை ) சாதாரண ஹோட்டல்களில் கூட உணவுகளின் விலை கன்னாபின்னாவென்று இருக்கலாம்.
7-8 வருடம் முன், அந்தமான் சுமாரான ஹோட்டல் ஒன்றில் தயிர் சாதம் 150 கொடுத்து விட்டு அழுதோம். மேற்படி ஏற்பாடுகள் நாம் எதிர்பாராத இக்கட்டிலிருந்து தப்பிக்க உதவும். சுற்றுலாவையே நம்பி இருக்கும் தலங்களில் ஆட்டோ மற்றும் ஓலா உபர் போன்றவைகளும் இருப்பதில்லை. ‘பிக்சட் ரேட், நோ பார்கெய்ன்’ கோட்பாடு உள்ள டாக்சிகள் மட்டும் கிடைக்கும்.
சீனாவில் சைவம் : நான் சீனாவிற்கு கான்பெரன்ஸ் (2012) போன போது நடந்ததைக் கேளுங்கள். கூட இருந்த நேபாள நாட்டைச் சேர்ந்தவர் சுத்த சைவம். வரும் போது , கடலை மிட்டாய், வறுத்த கடலை, வறுத்த பருப்பு வகைகள், கடலை பொரி, ரவை, எள் உருண்டைகள் – எல்லாம் ஒரு 2 வாரங்கள் வரையில் கெட்டுப் போகாத தன்மையுள்ள சமைக்கவும் தேவைப்படாத உணவுப் பொருட்களைக் கொண்டு வந்தார்.

ஏர்போர்ட் செக்கூரிட்டியில் கூட சண்டைப்போட்டு அவைகளை கொண்டுச் செல்ல அவர்களை கன்வின்ஸ் செய்து விட்டார். உணவு நேரங்களில் காய்கனி தவிர்த்து வேறு சைவ உணவு இல்லை என்றால் தான் கொண்டு வந்தவைகளால் சாமாளித்தார். அவர் ஒரு அரை தர்ப்பூசணி பழம் முழுதும் சாப்பிட்டதைப் பார்த்துள்ளேன். நானும் சைவம் தான். சைவ உணவு முறை பற்றி பலரும் அறிந்துள்ளார்கள் என்பது மகிழ்ச்சியான தகவல். அந்த அறிவியல் மாநாட்டில் எல்லா உணவுப் பொருட்களுக்கும் ‘லேபிள்’ குறிப்பிட்டு இருந்தது எங்களுக்கு உதவின எனலாம்.
வெளிநாடு ஹெல்த் இன்சூரன்ஸ்
வெளிநாடு செல்லும் அன்பர்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் முக்கியத்துவத்தை உரைக்கும் எச்சரிக்கை இது. என் நெருங்கிய உறவினர் சொன்னது. அந்த முதியவர் 80 வயது பக்கம். எந்த பெரிய உடல்நல தொந்தரவும் இல்லாத நபர்.
அமெரிக்காவில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இன்சூரன்ஸ் இல்லா விட்டால், ஆஸ்பத்திரி செலவுகள் நம் சொத்தையையே அழித்து விடும் . அந்த முதியவரிடம் என் உறவினர் தெரிவிக்க, அவர்களும் பிரிமியம் எவ்வளவு என்று பார்த்தால் சுமார் 1000 டாலர் (அவர் வயதிற்கு ).

ரிட்டர்ன் டிக்கெட் செலவில் பாதி. ரொம்பவும் அதிகமாக இருக்க அவர்கள் இன்சூரன்ஸ் எடுக்கவில்லை. அங்கே போய் ஒரு 2 மாதங்கள் கழித்து, அந்த முதியவர் கீழே விழுந்து ஆஸ்பிட்டல் அட்மிட் ஆகி இறந்தும் போய் விட்டார். கோடியில் செலவாகி விட்டது. அவரின் மகன் தன் சேமிப்பு மற்றும் கடன் வாங்கி சாமளிக்க வேண்டியதாயிற்று. எனக்கு அதைக் கேட்டுப் பெரிய அதிர்ச்சி. பெரிய பாடம்.
போன் உங்கள் வசம், உயிர் உங்கள் வசம்
அமெரிக்காவில் உள்ள நம் பிள்ளைகளுடன் சில மாதங்கள் செலவிடப் போகும் அன்பர்களுக்கு என் நெருங்கிய உறவினரின் இந்த அனுபவம் ஒரு எச்சரிக்கை மணி. அவர் வாயாலேயே கேட்போம்.
“வாடகை கார் அமர்த்திக் கொண்டு சுற்றுலா தலங்கள் போவது ரொம்ப வழக்கம். என் மகன் ஒரு டெஸ்லா வாடகை காரில் செல்லும் போது , நடு வழியில், ‘ரெஸ்ட்’ எடுக்க ஒரு இடத்தில் நிறுத்தினோம். என் மனைவி காரில் இருந்து கொள்வதாக சொன்னதால், அவளை அங்கே விட்டு விட்டு மற்றவர்கள் அங்கே ரெஸ்டாரண்ட் கிளம்பினோம். என் பையன் கார் சாவி எடுத்து கொண்டு விட்டான்.

கொஞ்ச நேரத்தில், காரின் விண்டோ முழுதும் மூடிக்கொண்டு விட்டது. காரும் லாக் ஆகி விட்டது. இந்த விஷயம் எங்களுக்குப் பின்னர் தான் தெரியும். நாங்கள் சாவகாசமாக இளைப்பாறிக் கொண்டிருக்க , போன் கால் வந்தது. என் மனைவி காரில் உள்ளே மாட்டிக் கொண்ட விவரம் தெரிவித்தாள் . நல்ல வேளையாக, என் மகன் ஒரு புது போன் அங்கே ஏக்டிவேட் செய்யப்பட்டது கொடுத்து இருந்ததால் தப்பினோம்” . வெளிநாடுகளுக்கு செல்லும் அன்பர்கள் இங்கிருந்து போகும் போதே சர்வதேச ரோமிங் பிளான் அல்லது அங்கே சென்ற பிறகு அங்கே உள்ள லோக்கல் சிம் வாங்கினால் பல இக்கட்டிலிருந்து தப்பிக்க முடியும்.
கலாட்டா மொழி : மத்திய அரசின் அழைப்பின் பேரில் கோவா-க்கு போக வேண்டி இருந்தது (2017) . அங்கு ஏர்போர்ட்டில் என்னை அழைத்துச் செல்ல வரும் காருக்குக் காத்திருந்தேன். இறங்கிய நபர்களின் கூட்டம் மெதுவாகக் குறைந்து வந்தது. எனக்கான டிரைவர் நபரைக் காணோம்.
மொபைலில் கூப்பிடலாம் என்று பார்த்தால் சுத்தமாக சிக்னல் இல்லை. இன்னொருவர் உதவி கேட்கத் தயக்கம். என் ஹிந்தி மிக மிகவும் தொடக்க நிலை தான். கடைசியாக, ஒருவர் என் பெயர் தாங்கிய பதாகையுடன் தென்பட , கையை அசைத்துக் கொண்டே அவரை நோக்கிச் சென்றேன். அவர் ஹிந்தியில் வாழ்த்துக்களுடன் என் பெட்டியை எடுத்துக் கொண்டு “பார்க்கிங்” நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்.
மொழிப் பிரச்சினை என்பதால் , மேலும் எங்களுக்குள் எந்தப் பேச்சும் எழவில்லை. கொஞ்சம் 2 கி.மீ வண்டி சென்றிருக்கும். அவருடய செல்போனில் ஒரு அழைப்பு வர , ‘சட்’ என்று வண்டியை நிறுத்தி விட்டு, என்னிடம் ‘தும் ஹைதிராபாத் ?’ என்றார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. நான் மைசூரு என்றதும், உடனே திசைத் திருப்பி மீண்டும் ஏர்போர்ட்டிக்கே கிளம்பினார். “ஏக் கன்பியூஷன் ஹை ! ” என்றார்.

அங்கே அவருக்காகக் காத்திருந்தார் ஹைதராபாத்-லிருந்து வந்த அன்பர். அன்பரின் பெயரும் என்னுடையப் பெயராக இருந்ததால் மொத்தக் குழப்பம். என்னுடைய டிரைவர் வரவில்லை மற்றும் என் போனில் நெட்ஒர்க் இல்லாமல் இருப்பதும் அவருக்கு இங்கிலீஷில் விளக்கி உதவக் கோரியதும், ஹைதராபாத் அன்பர் என்னுடைய டிரைவர்-க்கு போன் செய்ய, என் டிரைவர் 15 நிமிடங்களில் வர என்னால் பெரு மூச்சு விட முடிந்தது.
என் டிரைவரின் கார் நடு வழியில் மக்கர் செய்ய, வர தாமதம் என்று டிரைவர் மன்னிப்புக் கேட்க எல்லாம் முடிவில் சுபம் ஆயிற்று. ஒரு கடத்தல் போன்று நடந்த இந்த சம்பவம் எனக்கு ஒரு பாடமாகியது. தமிழ் ‘ழ’ கூட உச்சரிக்கத் தெரியாத ‘தமிழ் எங்கள் மூச்சு ‘ என்று கூப்பாடு போடும் நம்மூர் நடிக, அரசியல்வாதிகளைப் புறந்தள்ளி விட்டு, குறைந்த பட்ச ஹிந்தி தெரிந்தால் சுற்றுலாவாசிகளுக்கு வரப்பிரசாதம்
மேல் குறிப்பிட்டவை எல்லாம் தனிப்பட்ட முறையில் சுற்றுலா செல்பவர்களுக்குத் தான். நீங்கள் வழிக்காட்டியுடன் குரூப் டூர் மூலம் செல்வது என்றால், உங்கள் தலைவலி வேறு வகையாக புலப்படும். யாராவது பதிவிடுவார்கள் என்று நம்புகிறேன்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.