
தஞ்சாவூர் மாதாகோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் சீனிவாசன்-மணிமேகலை தம்பதி. இவர்களின் ஒரே மகன் ஸ்ரீராம். இவர் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை ஸ்ரீராம் தற்கொலை செய்து கொண்டார். பதறிய பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு மகனை கொண்டு சென்றனர்.
அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர் ஸ்ரீராம் ஏற்ககவே இறந்து விட்டதாக சொல்ல ஸ்ரீராமின் அம்மா மணிமேகலை கதறி அழுதார். இதையடுத்து மாணவனின் உடல் உடற்கூறாய்வு செய்வதற்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து மணிமேகலை வீட்டிற்கு சென்று அறையை பார்த்துள்ளனர். இதில் ஸ்ரீராம் எழுதிய கடிதம் ஒன்று இருந்துள்ளது.
அதில், பள்ளி வகுப்பறையில் சக மாணவியுடன் பேசிக் கொண்டிருந்தேன். இதை பார்த்த 11ம் வகுப்பு ஆசிரியர் சிம்காஸ் என்பவர் தவறாகப் புரிந்துகொண்டு என்னை பல மாணவர்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளில் பேசினார். அதனால் தான் தற்கொலை செய்து கொள்கிறேன் என ஸ்ரீராம் தன் கைப்பட அதில் எழுதியுள்ளார். இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் இன்று பள்ளி சென்றால் ஆசிரியர் திட்டுவார் என்பதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும், இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம் என்றும் தெரிவித்தனர். இதனால் பள்ளி முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. என் புள்ளை, ஒரு மாணவிக்கிட்ட ப்ரெண்ட்லியா பேசியிருக்கிறான். இது எங்களுக்கு தெரியாது. ஆசிரியர் எங்களை அழைத்து இதை சொல்லியிருக்கலாம்.
அதை செய்யாத ஆசிரியர் சக மாணவர்கள் முன்னிலையில் தகாத வார்த்தையில் ஸ்ரீராமை திட்டியிருக்கிறார். பேட் வேட்ஸ் பேசினால் அவனுக்குப் பிடிக்காது. அப்படி பேசுற இடத்துலயும் அவன் இருக்க மாட்டான். ஆசிரியர் திட்டியதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவன் நல்ல பையன் அவனை நல்ல விதமா வளர்த்திருக்கோம். ஸ்போர்ட்ஸில் ஆர்வமா இருந்து விளையாடி வந்தான். கடந்த வருடம் லீவ் போடாமல் ஸ்கூலுக்கு போனதற்கு பிரைஸ் வாங்கினான்.

அப்படிப்பட்டவனை ஆசிரியர் பேட் வேட்ஸில் திட்டியதால் இந்த முடிவை எடுத்துட்டான். அம்மாவைக்கூட அவன் நினைச்சு பாக்காம இப்படி செஞ்சுட்டான் அவன் இல்லாமல் நாங்கள் இனி எப்படி வாழப்போறோம்னு தெரியல” என நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.