
பெங்களூரு மாநகராட்சி குப்பை லாரியில் எடுத்து வரப்பட்ட குப்பையில் சாக்குமூட்டை ஒன்று இருந்தது. அதனை துப்புரவு தொழிலாளர்கள் திறந்து பார்த்தபோது உள்ளே பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தது.
பதறிய துப்புரவு தொழிலாளர்கள் இது குறித்து உடனே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
குப்பை வண்டி வந்த பகுதி மற்றும் அந்த வண்டி எந்த பகுதியில் குப்பைகளை எடுத்தது என்பது குறித்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.
இதில் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சாக்குமூட்டையை எடுத்து வந்து குப்பை லாரியில் போட்டுச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஆஷா என்று தெரிய வந்தது. அப்பெண்ணுடன் மொகமத் ஷாம்சுதின்(33) என்பவர் தெற்கு பெங்களூருவில் வாடகைக்கு வீடு எடுத்து லிவ் இன் உறவில் வசித்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது. அஸ்ஸாமை சேர்ந்த மொகமத்தை போலீஸார் உடனே கைது செய்து விசரணை நடத்தினர்.
அவரிடம் நடத்திய விசாரணை குறித்து போலீஸ் துணை கமிஷனர் லோகேஷ் கூறுகையில், ”இருவரும் ஒன்றரை ஆண்டுகளாக லிவ் இன் உறவில் வாழ்ந்துள்ளனர். ஆஷா தனியார் நிறுவனம் ஒன்றில் ஹவுஸ்கீப்பிங் ஊழியராக பணியாற்றி வந்தார். இருவருக்கும் ஏற்கெனவே திருமணமாகி தலா இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அவரவர் ஊரில் அவர்களது குடும்பம் இருக்கிறது.
வேலைக்கு வந்த இடத்தில் இருவரும் தங்களை வெளியுலகில் கணவன் மனைவியாக காட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தனர். இருவருக்கும் இடையே இரவில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது கைகலப்பில் முடிந்தது.
கோபம் அடைந்த மொகமத் ஆஷாவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டார். உடலை சாக்குமூட்டையில் கட்டி இரு சக்கர வாகனத்தில் எடுத்து வந்து அப்பகுதியில் நின்ற குப்பை லாரியில் தூக்கி போட்டுச் சென்றுள்ளார்” என்று தெரிவித்தார்.