
அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச பட்டா ஆவணங்கள் தொடர்பான கோப்பு தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாயமானதால் கணினியில் பதிவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இதற்கு தீர்வு காண வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் தாம்பரம் அருகே மாடம்பாக்கம் கிராமம், அண்ணா நகர், சர்வே எண் 686/ஏ, 686/1சி என்ற சர்வே எண்ணில் புஞ்சை தரிசு நில வகை கொண்ட நிலத்தில் குடியிருந்த, 34 நபர்களுக்கு கடந்த, 2008-ம் ஆண்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, 2012-ம் ஆண்டு கூடுதலாக, 4 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த இலவச பட்டாக்களை கணினியில் பதிவேற்றம் செய்து கணினி பட்டா வழங்க வேண்டும் என, பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக பலமுறை மாவட்ட நிர்வாகம், அமைச்சர், எம்எல்ஏ, வட்டாட்சியர், ஜமாபந்தி, மக்கள் குறைதீர் முகாம் என பல்வேறு இடங்களில் மனு அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை.