
நாகப்பட்டினம் அருகே உள்ள வடக்கு பொய்கைநல்லூர் காந்தி மகான் கடற்கரை சாலையில் உள்ள தைல மரகாட்டில் உள்ள குப்பை கொட்டும் இடத்தில் கடந்த 27ம் தேதி சாக்கு மூட்டை ஒன்று கிடந்துள்ளது. அந்த மூட்டையிலிருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் அதை பார்த்தவர்கள் நாகை நகர போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து டி.எஸ்.பி ராமச்சந்திரமூர்த்தி தலைமையில் வந்த போலீஸார் சாக்கு மூட்டையை பிரித்து பார்த்துள்ளனர்.
இதில் அழுகிய நிலையில் பெண் உடல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர் போலீஸார். அந்த பெண் யார், அவரை யாராவது கொலை செய்து சாக்கில் கட்டி வீசினார்களா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை செய்தனர். மேலும் மருத்துவக் குழுவினர் மூலம் ஸ்பாட்டிலேயே உடற்கூறாய்வும் செய்தனர். அத்துடன் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் சாக்கு மூட்டையில் இருந்த பெண்ணின் உடல் வேளாங்கண்ணி ஆரியநாட்டு தெருவைச் சேர்ந்த மும்தாஜ் (75) என்பது தெரியவந்தது. மேலும் போலீஸ் நடத்திய விசாரணையில், நெஞ்சை உலுக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீனவர்கள் குடியிருக்கின்ற ஆரியநாட்டுத்தெருவில் வாடகை வீட்டில் வசித்தவர் உசேன். இவரது மனைவி மும்தாஜ். இவர்களுக்கு ஜீனத்தம்மாள் (54) என்ற மகள், சையது (45), சுல்தான் இப்ராஹிம் (43) ஆகிய இரு மகன்கள் என மொத்தம் மூன்று பிள்ளைகள்.

இதில் மூன்று பேரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்பது பெரும் துயரம். உசேன் டீ கடையில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருடைய வருமானத்தில் மொத்த குடும்பம் நகர்ந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஏப்ரம் மாதம் உசேன் வயது முதிர்வு காரணமாக உசேன் உயிரிழக்க மொத்த குடும்பமும் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவித்துள்ளது. சோத்துக்கு கூட வழியில்லாத நிலையில் இருந்துள்ளனர். பின்னர் வேளாங்கண்ணியில் உள்ள டீ கடை ஒன்றில் இரண்டு மகன்களும் வேலை செய்ததாகவும் அதில் போதிய வருமானம் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வயது முதிர்வில் மும்தாஜ் உயிரிழந்திருக்கிறார். மனநலம் பாதிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளை தாங்கி பிடித்து கொண்டிருந்த மும்தாஜ் இறப்பு மூன்று பேரையும் நிலைகுலையச் செய்திருக்கிறது. வாழ்வதற்கு வழியில்லை, அடக்கம் செய்வதற்கு வசதியில்லாத வறுமையின் சூழலில் இருந்தவர்கள் சில தினங்கள் தன் தாயின் உடலை வீட்டுக்குள் வைத்திருந்ததாக தெரிகிறது. பின்னர் உடலை சாக்கு மூட்டையில் கட்டியுள்ளனர்.

இதையடுத்து இரண்டு மகன்களும் தாய் உடலை சுமந்து சென்று தலைமரக்காட்டில் உள்ள குப்பைக்குள் போட்டு விட்டு வந்துள்ளனர். இது தப்பு என்பது கூட தெரியாத நிலையில் அவர்கள் இருப்பது கொடுமையின் உச்சம். போலீஸ் நடத்திய விசாரணையில் இது தெரிய வந்துள்ளது. போலீஸிடமும், பணம் இல்லை அதனால் சாக்கில் கட்டி போட்டு விட்டோம் என சொல்லியுள்ளனர். விசாரணை டீமில் இருந்த போலீஸாரும் இவர்களது நிலையை எண்ணி வருந்தியுள்ளனர். சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த போலீஸ் அவர்களை விடுவிக்க தற்போது வீட்டில் இருக்கின்றனர்.
மேலும் சிலரோ, பள்ளி வாசல், ஜமாத் என யாருடனும் தொடர்பில் இல்லாததால் இவர்களது நிலை குறித்து யாருக்கும் தெரியவில்லை. உசேன் இறந்த போது கூட அடக்கம் செய்வதற்கு பொருளாதாரம் இல்லாததால் சில நாட்கள் வரை உடலை வீட்டில் வைத்திருந்தனர். பின்னர் துர்நாற்றம் வீசிய நிலையில் சிலரது உதவியுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தெரிகிறது. மும்தாஜ் இறந்தபோதும் தற்போதும் அதே வறுமை அவர்களை துரத்திக் கொண்டிருக்க இந்த முடிவை எடுத்துள்ளனர். உடற்கூறாய்வு செய்யப்பட்ட மும்தாஜ் உடலை அடக்கம் செய்வதற்கும், மூன்று பேரையும் மன நல காப்பகத்தில் சேர்ப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.