
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் புதிய மாவட்டங்களை அமைத்து முடிக்க வேண்டும். அதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “2027-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீடுகள் பட்டியல் தயாரிப்பு 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கவுள்ள நிலையில், காவல் நிலையங்கள், வட்டங்கள் தொடங்கி மாவட்டங்கள் வரையிலான எல்லைகளை டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் இறுதி செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளை இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான தலைமைப்பதிவாளர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.