
கடந்த மாதம் அகமதாபாத்தில் 274 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்து, நாசவேலை உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) விசாரித்து வருவதாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மொஹோல் தெரிவித்திருக்கிறார்.
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 230 பயணிகள் மற்றும் 12 விமான பணியாளர்களுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விமானம் விழுந்த விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்பட மொத்தம் 274 பேர் பலியாகினர்.
ஏர் இந்தியா விமான விபத்து, நாசவேலை உள்பட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருவதாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மொஹோல் தெரிவித்திருக்கிறார்.
ஏர் இந்தியா விமானத்திலிருந்து மீட்கப்பட்ட AI 171 இன் கருப்புப் பெட்டி விமான விபத்து புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ளது என்றும், முழுமையான ஆய்வுகாக நாட்டிற்கு வெளியே அனுப்பப்படாது என்றும் முரளீதர் மொஹோல் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ndtv -க்கு அளித்த பேட்டியில் இணை அமைச்சர் முரளீதர் மொஹோல் கூறுகையில், “இந்த விமான விபத்து ஒரு துயர சம்பவம். இது குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. திட்டமிட்டு இதுபோன்ற சதி நடத்தப்பட்டதா? உள்ளிட்ட எல்லா கோணங்களிலும் இந்த விபத்து குறித்து விசாரிக்கப்படுகிறது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. பல நிறுவனங்கள் இதற்காக பணியாற்றி வருகின்றன.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, முழு அவசரநிலையைக் குறிக்கும் வகையில், விமானி ‘மேடே’ துயர அழைப்பை விடுத்ததாக அகமதாபாத்தில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு தெரிவித்துள்ளது. இந்த விபத்து அரிதான நிகழ்வு. இரண்டு என்ஜின்களும் ஒரே நேரத்தில் செயல்படாமல் போனது ஒருபோதும் நடந்ததில்லை”.
விசாரணை அறிக்கை வந்தவுடன் அது இஞ்சின் பிரச்னையா? அல்லது எரிபொருள் விநியோகப் பிரச்னையா? அல்லது இரண்டு எஞ்சின்களும் ஏன் செயல்படவில்லை என்பது குறித்து கண்டறிய முடியும். இதற்கான அறிக்கை மூன்று மாதங்களில் வெளிவரும்.
மீட்கப்பட்ட கருப்பு பெட்டி எங்கும் செல்லாது. அது விமான விபத்து புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ளது. அதை வெளியே அனுப்ப வேண்டிய அவசியமில்லை. நாங்கள் முழு விசாரணையையும் செய்வோம் என்று கூறியிருக்கிறார்.
மேலும் தனியார் விமான நிறுவனத்தில் பணிபுரியும் விமானிகள், நீண்ட நேரம் வேலை செய்ய துன்புறுத்தப்படுவதாக உணர்ந்தால், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தை அணுகலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.