
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பத்வார் என்ற கிராமத்தை சேர்ந்தவர் இந்திரகுமார். பகுதி நேரமாக ஆசிரியர் வேலை செய்து கொண்டு விவசாயமும் செய்து வந்தார்.
அவருக்கு சொந்தமாக 18 ஏக்கர் நிலம் இருக்கிறது. ஆனால் 45 வயதான பிறகும் அவருக்கு திருமணமாகவில்லை. இதனால் இந்திர குமார் விரக்தியில் இருந்தார்.
18 ஏக்கர் நிலம் இருந்தும் திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என்று தனது ஆதங்கத்தை மத குரு அனிருதாச்சாரியா மகாராஜாவிடம் தெரிவித்தார். அவர் சாமியாரை சந்தித்து, எனக்கு 18 ஏக்கர் நிலம் இருக்கிறது. ஆனால் எனக்கு பிறகு நிலத்தை கவனித்துக்கொள்ள ஆள் இல்லை என்று கூறும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானது.
இந்த வீடியோவை பார்த்து திருமணத்திற்கு பெண் கிடைக்கும் என்று இந்திர குமார் நினைத்தார். ஆனால் சமூக வலைத்தளம் மூலம் குஷி கபூர் என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் அடிக்கடி சமூக வலைத்தளம் மூலமாக சாட்டிங் செய்து கொண்டனர்.
அப்பெண் இந்திர குமாரை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார். அதோடு அப்பெண் உத்தரப்பிரதேச மாநிலம் குஷி நகருக்கு வரும்படியும் அங்கு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி இந்திரகுமாருக்கு அழைப்பு விடுத்தார்.
இந்திர குமாரும், கிராமத்தில் எனக்கு திருமணம் செய்ய பெண் கிடைத்துவிட்டது என்றும், திருமணம் செய்வதற்காக உத்தரப்பிரதேசம் செல்கிறேன் என்று எல்லோரிடமும் சொல்லிவிட்டு கிளம்பிச்சென்றார். ஆனால் அதன் பிறகு அவரை காணவில்லை.

உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த புதரில் இந்திரகுமார் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கழுத்தில் கத்தி இருந்தது.
இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் குஷி திவாரி என்ற பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரித்தபோது அவரது உண்மையான பெயர் சஹிபா பானு என்று தெரிய வந்தது.
இது குறித்து குஷி நகர் போலீஸ் அதிகாரி சந்தோஷ் குமார் கூறுகையில், ”குஷி திவாரி திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி இந்திரகுமாரை அழைத்துள்ளார். இந்திர குமார் கோரக்பூர் வந்துள்ளார். அங்கு இருவரும் சந்தித்து திருமணம் செய்து கொண்டனர். அடுத்த சில நாள்கள் கழித்து இந்திரகுமார் உடல் புதருக்குள் கிடந்தது.
சஹிபா பானுவும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து இந்திரகுமாரிடம் இருந்த நகை மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு கொலை செய்து போட்டுவிட்டு சென்று இருக்கவேண்டும் என்று கருத்தப்படுகிறது. அது குறித்து விசாரித்து வருகிறோம். சஹிபா கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கூட்டாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சஹிபாவிடம் போலி ஆதார் கார்டும் இருந்தது” என்று தெரிவித்தார்.