
மதுரை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 30) திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
அப்போது திருமாவளவனிடம் அதிமுக- பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருகிறது. அதற்கு பதலளித்த அவர், “ அமித்ஷா மட்டும் திரும்ப, திரும்ப அதிமுகவுடன் கூட்டணி என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
இதுவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி குறித்து பெரிதாக ஒன்றும் சொல்லாமல் மௌனம் காத்துவருகிறார் என்று நான் சொல்லி இருந்தேன்.
அவர் அதற்கு அளித்திருக்கும் பதில் பாஜகவிற்கு தான் என்று புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது.
அதாவது, ‘கூட்டணி ஆட்சி இங்கு இல்லை. அதிமுக அதற்கு உடன்படாது’ என்கிற விடையை பாஜகவிற்குதான் சொல்லி இருக்கிறார் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
அதேபோல அதிமுகவை எந்த கொம்பன்னாலும் கபளீகரம் செய்ய முடியாது என்ற கருத்தையும் பதிவு செய்திருக்கிறார்.
கபளீகரம் செய்வதற்கு யார் முயற்சி செய்கிறார்கள் என்பதையும் அவர் தெளிவுப்படுத்த வேண்டும். அதிமுகவை திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் கபளீகரம் செய்ய வாய்ப்பில்லை.

அப்படி ஒரு முயற்சியை மேற்கொள்ளவும் முடியாது. உடன் இருக்கும் கட்சிகளால் மட்டும்தான் விழுங்கிச் செரிக்கிற முயற்சிகளை மேற்கொள்ள முடியும்.
ஆகவே அந்தக் கருத்தை பாஜகவிற்கு எதிராகச் சொல்லி இருக்கிறார் என்று உணர்ந்துகொள்ள முடிகிறது.
எனவே பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் இடையில் ஒரு இணைப்பு இருக்கிறதே தவிர பிணைப்பு இல்லை என்பதைப் புரிந்துக்கொள்ள முடிகிறது” என்று திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.