
திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிபுதூரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி ஜெயசுதா. மகள் ரிதன்யா (27). ரிதன்யாவுக்கும் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கிருஷ்ணனின் மூத்த மகனான ஈஸ்வரமூர்த்தி – சித்திராதேவி தம்பதியின் மகன் கவின்குமார் (28) என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தபின் அவிநாசியை அடுத்த பழங்கரையில் கவின்குமார், ரிதன்யா தம்பதி கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், சேயூர் அருகே மொண்டிபாளையம் செல்லும் வழியில் சாலையோரம் காருக்குள் ரிதன்யா வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடப்பதாக அப்பகுதி மக்கள் சேயூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சேயூர் போலீஸார் காரில் இருந்த ரிதன்யாவை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்ததில் ஏற்கெனவே ரிதன்யா இறந்துவிட்டது தெரியவந்தது.
`எல்லாம் சரியாகிவிடும் கவலைப்படாதே..!’
இதுகுறித்து சேயூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், “திருமணத்தின்போது ரிதன்யா வீட்டில் 500 சவரன் வருவதாக கூறி 300 சவரன் நகை போட்டுள்ளனர். 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான வால்வோ கார் மற்றும் 2 கோடி ரூபாய் செலவு செய்து திருமணம் செய்துள்ளனர். திருமணம் முடிந்த 10 நாள்களில் கவின்குமார், அவரது பெற்றோர் ரிதன்யாவிடம் மீதமுள்ள 200 சவரன் நகை இன்னும் தரவில்லை என்று கேட்டு சித்தரவதை செய்துள்ளனர்.
கவின்குமார் குடும்பத்துக்கு வாடகை போன்று மாதாந்திர இதர வருமானம் மட்டும் 20 லட்சம் ரூபாய் இருந்தததால் அவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து ரிதன்யாவை முழுநேரம் கொடுமைப்படுத்தி உள்ளார். மேலும், இதுகுறித்து தனது பெற்றோரிடம் ரிதன்யா தெரிவித்தபோதும் சில நாள்களில் எல்லாம் சரியாகிவிடும் கவலைப்படாதே என ஆறுதல் கூறியுள்ளனர்.

இந்நிலையில், வழக்கம்போல அவிநாசியை அடுத்து தாளக்கரையில் உள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் வழிபட்டு விட்டு அடுத்ததாக மொண்டிபாளையம் பெருமாள் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக ரிதன்யா காரை ஓட்டிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது, ரிதன்யாவை செல்போனில் தொடர்பு கொண்ட கணவர் கவின்குமார், வீட்டில் நடக்கும் விசயங்களை வெளியில் சொன்னால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என ரிதன்யாவை மிரட்டி உள்ளார். இதனால் மனமுடைந்த ரிதன்யா, சேயூர் சென்று அங்கு தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை வாங்கி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ரிதன்யா தற்கொலை செய்து கொள்ளும் முன்பு தனது தந்தை அண்ணாதுரைக்கு உருக்கமாக பேசி வாட்ஸ் ஆஃப்பில் ஆடியோ அனுப்பியுள்ளார்.

அந்த ஆடியோவில், `கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி என மூவரும் சேர்ந்து 200 பவுன் நகையைக் கேட்டு கடுமையாக சித்திரவதை செய்கின்றனர். கணவன் கவின்குமார் தன்னை உடல்ரீதியாக சித்திரவதை செய்கிறார். இந்த வாழ்க்கையை இனி தன்னால் வாழ முடியாது. மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க தனக்கு உடன்பாடு இல்லை. எனது இந்த முடிவிற்கு கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்தரா தேவி ஆகியோர்தான் காரணம்’ என ஆடியோ அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து ரிதன்யாவை தற்கொலைக்கு தூண்டியது உறுதியான நிலையில் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மாமியார் சித்ராதேவி என மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
