• June 30, 2025
  • NewsEditor
  • 0

டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக செயற்கை மழையை பொழியவைக்க டெல்லி அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த மழைக்காக ஜூலை 4 முதல் 11-ம் தேதிவரை மேக விதைப்பு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, “மேக விதைப்புக்கான வானிலை ஜூலை 3 வரை இல்லை என்பதால் ஜூலை 4-ம் தேதி இந்தத் திட்டம் தொடங்கவிருக்கிறது. இதற்கான செயல்பாடுகளை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) கான்பூர், புனேவில் உள்ள இந்திய வானிலை ஆய்வுத் துறையிடம் (ஐஎம்டி) சமர்ப்பித்துள்ளோம். இந்த சோதனைக்கு சுமார் ரூ.3.21 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.” என்றார்.

டெல்லி காற்று மாசு

மேக விதைப்பு என்றால் என்ன?

மேகங்கள் சிறிய நீர்த்துளிகள் அல்லது பனி படிகங்களால் ஆனவை. எனவே, செயற்கை மழை என அழைக்கப்படும் மேக விதைப்பு, மேகங்களிலிருந்து மழைப்பொழிவை அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வானிலை மாற்ற நுட்பமாகும்.

இதன் மூலம் மேகத் துளிகள் உருவாகி பெரிதாக வளர ஊக்குவிக்கும் சில பொருள்களை, விமானங்கள் மூலமாக காற்றில் தூவுவார்கள். இறுதியில் அது மழைப்பொழிவாக மாறும். இந்த மேக விதைப்பு பூமியிலிருந்து ஜெனரேட்டர்கள் மூலமும், ராக்கெட் போன்ற ஏவுதளங்கள் மூலமும் செயல்படுத்த முடியும்.

டெல்லி காற்று மாசு

மேக விதைப்பு வேலை செய்யுமா?

இதுபோன்ற செயற்கை மழையால் காற்றின் தரத்தில் முன்னேற்றம் சில மணிநேரங்கள் முதல் சில நாள்கள் வரை மட்டுமே நீடிக்கும். அதே நேரம் இது மாசுபாட்டின் மூலங்களை (உதாரணமாக வாகனங்கள், தொழிற்சாலைகள், தீப் புகை போன்றவற்றின் மாசுபாடுகளை) அகற்றுவதில்லை என்றும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. பெரும்பாலும் இந்த செயற்கை மழை திட்டத்தை புகைமூட்டமாக இருக்கும் சூழல்களில் மட்டும் பெரும்பாலான நாடுகள் பயன்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *