
கொரிமேட்டோ ஜூஸ்
தேவையானவை: கொத்தமல்லி இலை – 1 கப், தக்காளி – 4, புதினா – 1 கைப்பிடி, எலுமிச்சைப்பழச் சாறு – 2 டீஸ்பூன், சீரகத்தூள், உப்பு – தலா 1/4 டீஸ்பூன், பனங்கற்கண்டு அல்லது தேன் – தேவையான அளவு.
செய்முறை: கொத்தமல்லி, தக்காளி, புதினா, எலுமிச்சைப்பழச் சாறு, சீரகத்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்க வேண்டும். பின், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். இறுதியாக, வடிகட்டிய சாறுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து நன்றாகக் கலக்கிப் பரிமாறவும்.
பலன்கள்: தக்காளியில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிக அளவில் உள்ளன. இவை, நம் உடலில் உள்ள நோய்க்கிருமிகளின் தாக்குதலைத் தடுக்கும். புதினா இலையில் உள்ள வைட்டமின் பி மற்றும் இரும்புச்சத்து, காய்ச்சல், காமாலை போன்றவற்றைக் குணமாக்கும். கொத்தமல்லியில் உள்ள ஏ,பி,சி சத்துக்கள், மாலைக்கண் நோய், சிறுநீரகக் கோளாறு முதலியவற்றைப் போக்கும்.
கேட்டி – டாட்டி மிராக்கிள்

தேவையானவை: கேரட் துருவல் – 1 கப், தக்காளி – 3, நறுக்கிய வெள்ளரிக்காய் – 1 கப், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், பனங்கற்கண்டு – தேவையான அளவு.
செய்முறை: கேரட், தக்காளி, வெள்ளரிக்காய், எலுமிச்சைப்பழச் சாறு, பனங்கற்கண்டு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்க வேண்டும். பின், வடிகட்டி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து காலை நேர உணவுடன் எடுத்துக்கொள்ளலாம்.
பலன்கள்: வைட்டமின் ஏ, சி நிறைந்த ஜூஸ் இது. எளிதில் செரிமானம் ஆகும். காசநோய், நுரையீரல் நோய், ஆஸ்துமா போன்ற மூச்சுக்குழல் நோய்களைக் குணமாக்கும். கேரட்டில் உள்ள பீட்டாகரோட்டின் கண்புரை நோய் வராமல் பாதுகாக்கும். வெள்ளரி, உடலுக்குக் குளிர்ச்சியைத் தந்து, சிறுநீர் வெளியேற உதவும். கண்பொங்குதல் பிரச்னை நீங்கும்.
ஆப்பிள் – கேரோ பன்ச்

தேவையானவை: தோல், விதை நீக்கிய ஆப்பிள் – 1 கப், கேரட் துருவல் – 1/2 கப், எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன், பட்டைத்தூள் – 1 சிட்டிகை, இஞ்சி – சிறு துண்டு, தேன் – தேவையான அளவு.
செய்முறை: கேரட், இஞ்சி, பட்டைத்தூள் உடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து வடிகட்டி தனியாக வைக்க வேண்டும். பின், ஆப்பிளுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்து வடிகட்டி, சாறு எடுக்க வேண்டும். இப்போது, இரண்டு சாறுகளையும் ஒன்று சேர்த்து, தேவையான அளவு தண்ணீர், தேன் விட்டு, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து அருந்தலாம். இனிப்பு வேண்டாம் என்பவர்கள் தேன் சேர்க்காமலே அருந்தலாம்.
பலன்கள்: கேரட்டில் உள்ள பொட்டாசியம், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க உதவும். ரத்தப் புற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும். இஞ்சி, இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்கும். மெத்தத்தில் இந்த ஜூஸ், இதய நோய் மற்றும் புற்றுநோய் பாதிப்பு வராமல் தடுக்கும், சருமத்தைப் பொலிவாக்கும்.
தேங்காய்ப்பால் கூலர்

தேவையானவை: தேங்காய்த் துருவல் – 1 கப், வெள்ளரிக்காய் – 1/2 கப், பனங்கற்கண்டு – தேவையான அளவு.
செய்முறை: தேங்காய்த் துருவல், வெள்ளரிக்காய், பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை வடிகட்டி, காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலுக்குக் குளிர்ச்சியாக இருக்கும்.
பலன்கள்: முகம் பளபளப்பு பெற வெள்ளரிக்காய் உதவுகிறது. தேங்காய்த் துருவல், வாய்ப்புண் மற்றும் குடல்புண்ணைக் குணமாக்க உதவுகிறது. தேங்காயில் அதிக அளவு மாங்கனீஸ் நிறைந்து உள்ளது. இதில் உள்ள தாமிரம் மற்றும் வைட்டமின் சி, சருமத்தை மென்மை அடையச் செய்கிறது. ரத்தசோகையைச் சரிசெய்யும். உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும். எலும்புகளை உறுதியாக்கும்.
ஸ்ட்ராபெர்ரி – திராட்சை மிக்ஸ்டு ஜூஸ்

தேவையானவை: ஸ்ட்ராபெர்ரி – 200 கிராம், திராட்சை – 50 கிராம், தேன் – சிறிதளவு.
செய்முறை: ஸ்ட்ராபெர்ரி மற்றும் திராட்சைப் பழத்தை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து, தேன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும். குளிர்ச்சிக்காக, சிறிது ஐஸ் கட்டிகள் சேர்த்துக்கொள்ளலாம்.
பலன்கள்: திராட்சை, ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி நிறைவாக உள்ளது. இதனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள், புற்றுநோய் செல்களைத் தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களான, அந்தோசயனின் (Anthocyanin) மற்றும் எல்லாஜிக் அமிலம் (Ellagic Acid) இதில் அதிக அளவில் உள்ளன. நியாசின், ஃபோலிக் அமிலம், ரிபோஃப்ளேவின் முதலான வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் சத்துக்களும் இதில் அதிக அளவில் இருக்கின்றன. மாங்கனீஸ், பொட்டாசியம், மக்னீசியம், துத்தநாகம், கால்சியம் ஆகிய தாதுஉப்புகள் ஓரளவு கிடைக்கும். தொடர்ந்து சீரான இடைவேளைகளில் இந்த ஜூஸைக் குடித்துவந்தால், இதய நோய்கள் வராது. இளமைப் பொலிவு கிடைக்கும்.
அன்னாசி – புதினா ஜூஸ்

தேவையானவை: அன்னாசிப் பழத்துண்டுகள் – 200 கிராம், புதினா – 10 கிராம், சர்க்கரை அல்லது தேன், ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு.
செய்முறை: அன்னாசி, புதினா, சர்க்கரை அல்லது தேன் மற்றும் ஐஸ் கட்டிகள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டி அருந்த வேண்டும்.
பலன்கள்: வைட்டமின் சி மற்றும் பி6 நிறைந்த ஜூஸ். பீட்டாகரோட்டின் மற்றும் பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாதுஉப்புகள் இதில் உள்ளன. புதினா, இருமலுக்கும் ஆஸ்துமாவுக்கும் மிகவும் நல்லது. தொண்டைக் கமறல், முகப்பரு இருப்பவர்கள், இந்த ஜூஸில் புதினாவை அதிக அளவு சேர்த்துப் பருகலாம். தோல் வறட்சி இருப்பவர்கள், உடலில் உள்ள நச்சுக்கள், மலச்சிக்கல் நீங்க, இந்த ஜூஸைப் பருகலாம். ஓர் உணவு வேளைக்கும் மற்றொன்றுக்கும் இடைப்பட்ட நேரத்தில் அருந்தலாம். ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவு இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன், புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும் ஆற்றலும் இந்த ஜூஸுக்கு உண்டு.
ப்ரைம்ஸ்டோன் ஜுஸ்

தேவையானவை: மாம்பழம் – 1, தோல், விதை நீக்கிய ஆரஞ்சு, சாத்துக்குடி – தலா அரைப் பழம், சர்க்கரை, ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு.
செய்முறை: ஆரஞ்சு, சாத்துக்குடிச் சுளைகளை மிக்ஸியில் அரைத்துச் சாறு எடுக்க வேண்டும். இதனுடன், மாம்பழத்தை தோல், கொட்டை நீக்கி, துண்டுகளாக நறுக்கிப் போட்டு, சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்து, மீண்டும் மிக்ஸியில் நன்றாக அரைக்க வேண்டும்.
பலன்கள்: வைட்டமின் ஏ மற்றும் ஃபிளேவனாய்டு இருப்பதால், கண்களுக்கு மிகவும் நல்லது. பொட்டாசியம் சத்து, இதயம் சீராகச் செயல்பட உதவும். இந்த ஜூஸில் உள்ள தாமிரம், ரத்தச் சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு உதவும். அதிக நார்ச்சத்து இருப்பதால், சர்க்கரை சேர்க்காமல் அருந்துவது, கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். செரிமானப் பிரச்னை இருப்பவர்களும் இந்த ஜூஸ் அருந்தலாம். மூட்டுவலி, இதய நோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள், இந்த ஜூஸை அடிக்கடி பருகலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR