
விருதுநகர்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30 சதவீத வாக்குகளைக் கைப்பற்றும் வகையில் திட்டமிட்டு களப்பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது விருதுநகர் மாவட்ட திமுக.
2026 ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இப்போதிருந்தே வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், திருச்சுழி, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய 7 சட்டபேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், தற்போது, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, ராஜபாளையம் தொகுதிகளை திமுகவும், சிவகாசி, சாத்தூரை திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மதிமுகவும் கைப்பற்றியுள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டும் அதிமுக வசமானது.