
விருதுநகர்: ‘விருதுநகரே விடைபெறுகிறேன்' என்ற விருதுநகர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஜெயசீலன் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநராகப் பணியாற்றி வந்த ஜெயசீலன் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி அன்று பொறுப்பேற்றார். அப்போது முதல், ‘காபி-வித் கலெக்டர்’ என்ற பெயரில் தொடர்ந்து 200-க்கு மேல் நிகழ்ச்சி நடத்தியது, அரசுப் பள்ளி மாணவர்களை வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வது, பசுமை ஆர்வலர் திட்டம், இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்கும் திட்டம். கற்றது ஒழுகு திட்டம், அறிவோம் தெளிவோம் திட்டம், மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர்க் கூட்டம், உண்டு உறைவிட பயிற்சி, கரிசல் இலக்கிய அறக்கட்டளை, திருக்குறள் மாணவர் மாநாடு, விருதுநகர் கல்வி அறக்கட்டளை, உயர்கல்வி வழிகாட்டு மையம், மலரும் புன்னகைத் திட்டம், ‘இரும்பு கண்மணி’ திட்டம் என மாணவ, மாணவிகள், இளம்பெண்கள், எழுத்தாளர்கள் என பலருக்குமான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.