
இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் கடந்த 2022 டிசம்பரில் டெல்லியிலிருந்து தனது சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது சாலை விபத்துக்குள்ளானார்.
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பண்ட் 632 நாள்கள் கழித்து வங்கதேசத்துக்கெதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச போட்டியில் களமிறங்கி அப்போட்டியிலேயே சதமடித்து அசத்தினார்.
அதன்பிறகு, 2024 டி20 உலகக் கோப்பை, பார்டர் கவாஸ்கர் தொடர் ஆகியவற்றைத் தொடர்ந்து, தற்போது இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இரு இன்னிங்ஸிலும் சதமடித்து அடுத்த போட்டிக்கு இன்னும் தீவிரமாகத் தயாராகியிருக்கிறார்.
இந்த நிலையில், விபத்தில் சிக்கிய பிறகு மருத்துவமனையில் கண்விழித்ததும் பண்ட் கேட்ட முதல் கேள்வி என்னவென்று அவருக்கு சிகிச்சையளித்த பிரபல எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் டின்ஷா பர்திவாலா பகிர்ந்திருக்கிறார்.
தி டெலிகிராப் ஊடகத்திடம் பேசிய டின்ஷா பர்திவாலா, “பண்ட் முதல் கேள்வியாக, “நான் மீண்டும் விளையாட முடியுமா?” என்று கேட்டார்.
அவரின் தாயார், “அவர் மீண்டும் நடக்க முடியுமா?” என்று கேட்டார்.
ஆனால், அவரின் காலில் காயங்கள் அதிகமாக இருந்ததால் முழங்காலில் முழுமையான மறுசீரமைப்பு தேவைப்பட்டது.
அறுவை சிகிச்சை எல்லாம் முடிந்த பிறகு அவரால் பல்கூட துலக்க முடியவில்லை.
அவரால் உண்மையில் தனது கைகளை அசைக்க முடியவில்லை. அவை முற்றிலும் வீங்கியிருந்தன.
படிப்படியாக அவர் பிறரின் உதவியில்லாமல் தண்ணீர் குடிக்கத் தொடங்கினார்.
பின்னர் நான்கு மாதங்களுக்குப் பிறகு ஊன்றுகோல் இல்லாமல் அவரால் நடக்க முடிந்தது.
ஆனால், பண்ட் மீண்டும் கிரிக்கெட் விளையாட முடியுமா என்று சந்தேகம் எழுந்தது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரிடம் விவாதித்தபோது, “முதல் அதிசயம் நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள், இரண்டாவது அதிசயம் உங்கள் கால்கள் சரியாகிவிட்டன.
ஒருவேளை நீங்கள் மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்பினால் அது மூன்றாவது அதிசயமாக இருக்கும்.
எல்லாவற்றிற்கும் நம்பிக்கையுடன் இருப்போம். சரியான நேரத்தில் அடித்து ஓர் அடி எடுத்து வைப்போம்” என்றேன்.

அப்போது அவர், “சரி அவ்வாறு நடக்கிறது என்றால் அதற்கு எவ்வளவு நாள்கள்?” என்று கேள்வியெழுப்ப, “கிரிக்கெட்டுக்கு திரும்ப 18 மாதங்கள் ஆகும்” என்று நான் கூறினேன்.
அவரின் முழு எண்ணமும் “முடிந்தவரை விரைவாக என்னை இயல்பு நிலைக்குத் திரும்பச் செய்யுங்கள்” என்பதுதான்.
அதற்கு, எங்களால் முடிந்ததை நாங்கள் செய்கிறோம் என்பதை உறுதிப்படுத்த முயற்சித்தோம்.
அவர் மீண்டு வந்தது நாங்கள் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக நடந்தது. அதற்காக, சாதாரண நபர்களை விடவும் கடினமாக அவர் உழைத்தார்” என்று கூறினார்.