• June 29, 2025
  • NewsEditor
  • 0

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த சென்னாக்கால்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (42). கூலித் தொழிலாளியான முருகனுக்கு மணிமேகலை என்ற மனைவியும், கலாவதி, காவியா என்ற மகள்களும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 26-ஆம் தேதி சென்னாக்கல்பாளையம் கிராமத்தில் மேட்டுக்காட்டு தோட்டத்தில் உள்ள வேப்பமரத்தில் கைகளைக் கட்டிக் கொண்டு தூக்கில் தொங்கிய நிலையில் முருகன் பிணமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக விசாரித்த அலங்கியம் போலீஸார், காசநோயால் பாதிக்கப்பட்ட முருகன் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாக வழக்குப் பதிவு செய்தனர். தாராபுரம் அரசு மருத்துவமனையில் முருகன் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முருகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள், தமிழ்ப் புலிகள் கட்சி குற்றச்சாட்டை எழுப்பியுள்ளன.

மரணம்

இதுகுறித்து தமிழ்ப் புலிகள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஒண்டிவீரன் பேசுகையில், “காசநோயால் பாதிக்கப்பட்ட முருகன் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 10 அடிக்கும் மேல் உயரமுள்ள மரத்தின் மீது ஏறி, கைகள் இரண்டையும் கட்டிக் கொண்டு ஒருவரால் எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும். இதுகுறித்து போலீஸில் கேட்டால், முருகன்தான் தனது கைகளைக் கட்டிக் கொண்டு மரத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல், பிரேதப் பரிசோதனை செய்தவுடன் அவசர கதியில் முருகனின் உடல் எரியூட்டப்பட்டுள்ளது. கடந்த ஒருவாரமாக கணவன், மனைவிக்கு இடையே சண்டை நடந்துள்ளது. இதில், முருகனின் மனைவி மணிமேகலையிடம் கூட போலீஸார் சரியாக விசாரணை நடத்தவில்லை. இதுபோன்ற பல சந்தேகங்கள் முருகனின் மரணத்தில் ஒழிந்துள்ளது. உரிய முறையில் போலீஸார் விசாரணை நடத்தவில்லையென்றால், போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்” என்றார்.

காவல் துறை

இதுகுறித்து தாராபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் கூறுகையில், “உடல்நலம் பாதிக்கப்பட்ட முருகன் இதற்கு முன்பு இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். கடந்த சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்ட முருகன், மரத்தில் ஏறி தனது கைகளைக் கட்டிக் கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. முருகனின் உறவினர்கள் அவரது மரணம் குறித்து எந்த சந்தேகமும் எழுப்பவில்லை. அரசியல் கட்சியினர் சிலர் ஆதாயத்துக்காக குற்றச்சாட்டை எழுப்பி வருகின்றனர்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *