
ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடி தடை காலம் முடிவடைந்த நிலையில், கடந்த 15-ம் தேதி முதல் மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.
மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற போதும் மீனவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு மீன்கள் பிடிபடவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த மீனவர்கள் குறைந்த அளவே மீன்பிடிக்க செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் பாரம்பரிய இந்திய மீனவர் நலச்சங்கத்தினர் இணைந்து ராமேஸ்வரத்தில் `கச்சத்தீவு மீட்பு’ மாநாட்டினை நடத்தினர்.
இந்த மாநாட்டில், கடந்த 2014 துவங்கி சென்ற ஆண்டு வரை 3550 மீனவர்களும் அவர்களது 706 படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மீனவர்கள் சுமார் 200 கோடி மதிப்புள்ள படகுகளை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இலங்கை அரசின் இத்தகைய செயலை தடுத்து நிறுத்தும் வகையில், பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது போல் இலங்கையுடன் செய்து கொண்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தையும் ரத்து செய்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் சனிக்கிழமை காலை ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

நேற்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து 466 படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் பாரம்பரிய பகுதிகளில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் சேசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகினையும் அதில் இருந்த சேசு உள்ளிட்ட 8 மீனவர்களையும் சிறை பிடித்து சென்றனர்.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் விசாரணைக்காக தலைமன்னார் துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். `கச்சத்தீவு மீட்பு மாநாடு’ முடிந்த மறுநாளிலேயே மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து செல்லப்பட்டிருக்கும் அத்துமீறல் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.