
கோவையில் `பறந்து போ’ பிரீமியர் காட்சி
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ராமின் அடுத்த படைப்பான பறந்து போ திரைப்படம் பிப்ரவரி மாதம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதை தொடர்ந்து நேற்று ( 26.06.2025 ) அப்படத்தின் பிரீமியர் காட்சி இந்தியாவில் முதல்முறையாக கோவையில் உள்ள தனியார் திரையரங்கில் திரையிடப்பட்டது.
முக்கிய கதாபாத்திரங்களில் சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ், மிதுன் ரயான் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் வருகிற ஜூலை நான்காம் தேதி வெளி வருகிறது. குழந்தைகள், பெற்றோர்கள், முதியவர்கள் என பலரும் இக்காட்சியைக் காண வந்திருந்தனர்.
காட்சி முடிந்தவுடன் பார்வையாளர்களிடம் இயக்குனர் ராம், “இந்தியாவில் முதல்முறையாக இங்கு இந்த பிரீமியர் காட்சி நடைபெறுகிறது. இவ்வாறான பிரீமியர் காட்சி திரையிட வேண்டும் என்று மிகவும் ஆசை. அது இன்று நடந்துள்ளது. இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இப்படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும். இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மித்துனுக்கு வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். குழந்தைகளுக்காக சிறுசிறு தியாகங்கள் செய்யும் பெற்றோர்களுக்காக இந்த படம். உலகில் உள்ள அனைத்து பார்வையாளர்களையும் சிரிக்க வைக்க வேண்டும் என்ற முயற்சி தான் இந்த படம்” என்று கூறியவர் குழந்தைகளிடமும் பெற்றோர்களிடமும் கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது, ” கோவை எனது சொந்த ஊர். படத்தில் உள்ள பல காட்சிகள் கோவையில் எடுக்கப்பட்டது தான்.
பறந்து போ ஒரு நல்ல உணர்வை தரக்கூடிய காமெடியான படம். இப்படம் எனது ரசிகர்களுக்கும் அனைத்து பார்வையாளர்களுக்கும் ஒரு சர்ப்ரைஸ் ஆகத்தான் இருக்கும். பெற்றோர்களின் தியாகங்களுக்கான ஒரு படம். மலை உச்சிக்கு செல்வது கடலை பார்ப்பது எல்லாம் எனக்கு பிடித்த ஒரு உணர்வு. அதைப் படத்திலும் உணர முடியும்.We’ll fly together, celebrate life together.
படத்தின் கதை..
சிவா ஒரு சிறந்த நடிகர். அவரின் நகைச்சுவை குழந்தைத்தனமான ஒன்றாகவும் சிறப்பாகவும் இருக்கும். இப்படத்தில் அவரது கதாபாத்திரமும் ஒரு நகைச்சுவையான குழந்தை போன்ற அப்பாவாகத்தான் இருக்கும்.
யுவன் சங்கர் ராஜா, நீங்க எல்லாம் சொல்வது போன்று எனது ப்ரோ போல ஆவார். இப்படத்தின் சமயத்தில் அவருக்கு வேலைகள் இருந்ததால் பின்னணி இசை மட்டும் அமைத்து ஒரு பாடலும் பாடி கொடுத்துள்ளார். சிறப்பு தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ள அஞ்சலி முதல் படத்திலிருந்து மிகவும் ஒத்துழைப்பவராக இருந்துள்ளார்.
நா முத்துக்குமார் யாராலும் மறக்க முடியாத ஒருவர். வரும் ஜூலை 19ஆம் தேதி நா முத்துக்குமாரின் 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் ஒரு பெரிய நிகழ்வை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம்.
மலை ஏறுவது இப்படத்தின் கதை அல்ல ஆனால் கதையில் மலை ஏறுவது இருக்கும். மலை ஏறுவது ஒரு மகத்தான விஷயம். பறந்து போ படமானது இன்றைய உண்மை யதார்த்தங்களை எடுத்துக் கூறக்கூடிய ஒரு படமாக இருக்கும். இப்படத்தினை காணும் பொழுது எட்டு வயது குழந்தையும் சிரிப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
மக்கள் இப்பொழுது திரைப்படங்களில் சுவாரஸ்யத்தை தாண்டி வாழ்க்கையின் எதார்த்தங்களை எடுத்துக் கூறுகையில் அதனை ஏற்றுக் கொள்கின்றனர். பிற இயக்குனர்கள் பார்ப்பதைத் தாண்டி மக்களுக்கு நிஜமாகவே படம் பிடிக்கிறதா என்று பார்க்கத்தான் இந்த ப்ரீமியர் காட்சி.

இப்படத்திற்கு விருது கிடைத்தால் ஒருவர் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறும் போது கிடைக்கும் இன்பத்தைப் போல கூடுதல் மகிழ்ச்சி அளிக்கும். மேலும் படம் வெளியான பிறகு மித்துனுக்கு கிடைக்க இருக்கும் வரவேற்பினை எதிர்பார்க்கிறேன். ஏழு கடல் ஏழு மலை படம் வெளியான பிறகு ஒரு நல்ல காமெடியான கதை கிடைத்தால் நிச்சயம் அதில் நடிப்பேன்.
குழந்தைகளுக்கு தன்னால் முடிந்தவற்றை செய்யும் அனைத்து பெற்றோர்களும் நல்லவர்கள்தான். இப்படமும் அதைத்தான் சொல்கிறது. குழந்தைகள் பெற்றோரிடம் எதிர்பார்ப்பது அவர்களுடன் சற்று நேரம் செலவிட வேண்டும் என்பது மட்டுமே. பெற்றோர்கள் அனைவரும் அதை செய்ய வேண்டும். மேலும் இப்படத்தினை அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து மகிழ வேண்டும்.” என்று கூறினார்.
`மழையை கண்டு வியக்கும் பையன், நான்தான்..’
மேலும் விகடனுக்கு அளித்த பேட்டியில், “இப்படத்தில் மழையை கண்டு வியக்கும் பையன் வேறு யாருமில்லை நான்தான். எனக்கு மலை ஏறுவது மிகவும் பிடிக்கும். இதுவரை நிறைய மலை ஏறி இருக்கிறேன். சிறிய வயதிலிருந்தே மலைகளை காணும் போது அதனை ஏறி பார்ப்போம் என்று தோன்றும். இப்படத்தில் வரும் குழந்தையின் சுதந்திர உணர்வு என்பது என்னுள் தோன்றிய சுதந்திர உணவு தான். இயற்கை ஏதோ ஒரு வகையில் மனிதர்களை ஆற்றுபடுத்திக் கொண்டே தான் இருக்கிறது. கடற்கரையில் நிற்கும் போது வீசும் கடல் காற்றானது ஏதோ ஒரு வகையில் நமது மனதை குணப்படுத்தும். மலை உச்சியில் போய் நிற்கும் பொழுதும் அதே உணர்வு தான்.
`கோவை எனது சொந்த ஊர் போல..’
ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை கோவையில் தான் படித்தேன். அப்பொழுதெல்லாம் கோவை மிகவும் குளிராக இருக்கும். ஸ்வெட்டர் போட்டுக் கொண்டு பள்ளிக்குச் செல்வது நியாபகம் இருக்கிறது. மழை காலங்களில் அனைவரும் பிங்க் ப்ளூ நிறங்களில் ரெயின் கோட் விற்பார்கள். இப்போது கோவை அவ்வளவு குளிர்வதில்லை. இல்லை நான் வளர்ந்து விட்டேனா என்றும் தெரியவில்லை.

கோவையில் தான் நிறைய அட்டூழியங்களும் செய்திருக்கிறேன். முதல் காதல் க்ரஷ் இங்குதான். அப்பொழுதெல்லாம் இரண்டாம் எண் பஸ்ஸில் செல்லும் பெண்ணை பின் தொடர்ந்து செல்வோம். ரேஸ் கோர்ஸ் எனக்கு பிடித்த இடம். கோவை எனது நினைவில் என்றும் இருக்கிறது. கோவையில் எனது நண்பர்கள் இருக்கின்றனர். நாம் ஆறாவது முதல் பன்னிரண்டாவது வரை எங்கு படிக்கிறோமோ அந்த ஊர் தான் நமது சொந்த ஊர் போல மனதில் நிற்கும். அவ்வகையில் கோவை எனது சொந்த ஊர் போல தான்.
சூரியகாந்தி பூ
இப்படத்தில் இடம்பெறும் சூரியகாந்தி பூவானது மிகவும் அழகான ஒன்று. எனக்கு சூரியகாந்தி மிகவும் பிடிக்கும். சிறிய வயதில் முதல் முறையாக சூரியகாந்தி தோட்டத்தை பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். பிறகு பாரதிராஜா படங்களில் எத்தனை சூரியகாந்தியை அருகில் பார்த்திருப்போம். மைசூர் செல்லும் சாலையில் சூரியகாந்தி தோட்டங்கள் அதிகமாக இருக்கும். அவ்வழியாக செல்பவர்கள் நூறு ரூபாய் கொடுத்து புகைப்படம் எடுத்துச் செல்வர்.
ஒரு ரோஜா பூவையோ அல்லது மல்லி பூவையோ கையினுள் அடக்கி மறைத்து எடுத்துச் செல்வது போல சூரியகாந்தியை மறைக்க முடியாது. மிகவும் பெரியதாக ஒரு மைக் போன்று இருக்கும். எனவே நம் மனதில் உள்ள அனைத்தையும் அதனுடன் பேசலாம். மேலும் சூரியனை நோக்கித் திரும்பும், அதனுடைய நிறம் ஒரு துள்ளல் உணர்வைத் தரும். அதுமட்டுமின்றி இந்த தலைமுறைினரின் மலர் சூரியகாந்தி என்றும் யாரோ ஒருவர் சொல்லி கேள்விப்பட்டு உள்ளேன்.

ஏழு கடல் ஏழுமலை திரைப்படம்
அனைவரும் எதிர்பார்க்கும் ஏழு கடல் ஏழுமலை திரைப்படம் ஏழுகடல் ஏழு மழையை தாண்டி இன்னும் மூன்று மாதங்களில் திரையினை வந்தடையக்கூடும். பறந்து போ என்று பெயர் வைத்ததனாலோ என்னவோ இப்படம் முதலாவதாக பறந்து வந்து விட்டது.
இப்படம் மிகவும் நல்ல படம். ஜூலை 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. லாக்டவுன் சமயத்தில் எனது குடியிருப்பில் இருந்த குழந்தைகளை கவனித்தேன். அதனுடைய எதிரொளிப்பு தான் இந்த படம். இப்படத்தினை எடுக்கும் பொழுது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். அதே மகிழ்ச்சி படம் பார்க்கும் உங்களுக்கும் வர வேண்டும்” என்று கூறி நெகிழ்ந்தார்.
அதுமட்டுமின்றி இப்படத்தில் இயக்குனர் ராம் அவர்களின் குடியிருப்பு பகுதியில் உள்ளவர்கள் தனது மகனின் ஆசிரியை ஆகியோரை நடிக்க வைத்துள்ளார். இந்த கதாபாத்திரங்கள் மூலம் நமது வாழ்வியல் யதார்த்தங்களை இயக்குனர் ராம் எடுத்துரைத்துள்ளார். மேலும் இப்படத்தின் பிரீமியர் காட்சிக்கு குழந்தைகளிடமிருந்தும் பெற்றோர்களிடமிருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது.