
ஊரக வளர்ச்சித் துறையில் 4 ஆண்டுகளில் ரூ.19,024 கோடியில் செயல்படுத்தப்படும் பல்வேறு முன்னோடி திட்டங்கள் நாட்டின் பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டுவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் சுயமாகச் செயல்படவும், மேலிட அனுமதிகளைப் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கவும் கிராம ஊராட்சிகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கும் வரம்பு ரூ.2 லட்சம் என்பதை ரூ.5 லட்சம் ஆகவும் வட்டார ஊராட்சிக்கான அனுமதி வரம்பு ரூ.10 லட்சம் என்பது ரூ.20 லட்சம் ஆகவும் மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.20 லட்சம் என்பதை ரூ.50 லட்சம் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.