
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரி அமைந்துள்ளது. இதில் பயிலும் மாணவி கடந்த 25-ம் தேதி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த மாணவி கஸ்பா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், ‘‘தேர்வு விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பாக கல்லூரி ஊழியர் மனோஜித் மிஸ்ராவை சந்தித்தேன். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் என்னிடம் கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்தேன்.
பின்னர், 2 மாணவர்களை அழைத்து என்னை பாதுகாவலர் அறைக்கு கூட்டிச் செல்லுமாறு அறிவுறுத்தினார். அவர்கள் என்னை வலுக்கட்டாயமாக அங்கு அழைத்துச் சென்றனர். பின்னர் பாதுகாவலரை வெளியே இருக்குமாறு கூறிவிட்டு என்னை வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவத்தை தடுக்க பாதுகாவலர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை’’ என கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.