
கோவை: கோவையில் பயிற்சியுடன் கூடிய மருத்துவர் படிப்பில் சேர வந்த, ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவருக்கு தாடியை அகற்ற தனியார் மருத்துவக் கல்லூரி அழுத்தம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதை, சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தினர் மறுத்துள்ளனர்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரைச் சேர்ந்தவர் சுபேர் அகமத் (35). இஸ்லாமியரான இவர் அங்குள்ள மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மற்றும் எம்.டி படித்துள்ளார். அதைத் தொடர்ந்து சிறுநீரகவியல் துறையில் பயிற்சியுடன் கூடிய மேற்படிப்பு படிக்க அவர் முடிவு செய்தார். இதற்காக அவர் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத்தின் மூலம், அகில இந்திய இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சமீபத்தில் தேர்வு செய்தார்.