சூர்யா, விஜய் சேதுபதி நடிப்பில், ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பீனிக்ஸ்’ திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. விஜய் சேதுபதி, இயக்குநர் அ.வினோத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அ. வினோத் பேசுகையில், “ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாறுவதற்கு 10 படங்கள் தேவைப்படும். ஆனால், சூர்யாவுக்கு அது முதல் படத்திலேயே கிடைத்திருக்கிறது. அதற்காக பெரிய கடின உழைப்பையும் நீங்கள் செலுத்தியிருக்கிறீர்கள். இந்தப் படம் பெரிய அளவில் வெற்றியைப் பெறும்,” என்று கூறி முடித்தார்.
இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில், “நான் விஜய் சேதுபதி சாருடன் படம் பண்ணுகிறேன். அதனால் இங்கு வந்திருக்கிறேன் என்று நினைப்பார்கள். அது எல்லாம் கிடையாது. நான் சூர்யாவுக்காகத்தான் இன்று இங்கு வந்திருக்கிறேன்.
இதுவரை நான் வேலை பார்த்த ஸ்டன்ட் இயக்குநர்களில் தெளிவானவர் அனல் அரசு மாஸ்டர்தான். அதுபோல, இந்தப் படமும் ஒரு தெளிவான படமாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.
விஜய் சேதுபதி சாரை நான் முதன்முதலாக நேரில் பார்த்த தருணம் இன்னும் நினைவில் இருக்கிறது. ‘பசங்க’ படத்தில் விமல் நடித்த கதாபாத்திரத்திற்கு இவரை நடிக்க வைக்கலாமா என்று இயக்குநர் ப்ரேம் குமார் அழைத்து வந்தார்.
அவருடைய முகத்தில் அப்போது அப்பாவித்தனம் இருந்தது. எப்படியாவது ஜெயித்துவிட மாட்டோமா என்று ஒரு எண்ணத்தோடு அவர் இருந்தார். ‘பசங்க’ படத்துக்காக நான் எதிர்பார்த்த முகம் வேறு. ஆனாலும், சேது சார், ‘பரவாயில்லை சார், ஏதாவது ஒரு கேரக்டர் கொடுங்கள்.
நான் பண்ணுகிறேன்,’ என்று சொன்னார். அப்படி ஒரு சீன் பண்ணி, எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்தது. சூர்யாவை நான் முதல் முறையாக சந்தித்த சமயத்தில், அவரிடம் அப்பாவித்தனம் சுத்தமாக இல்லை. ஆனால், அவரிடம் ஒரு தெளிவு இருந்தது.
‘சண்டக்கோழி’ படத்தில் விஷால் சாரைப் பார்க்கும்போது எப்படியான ஒரு நம்பிக்கை வந்ததோ, அதே நம்பிக்கை சூர்யா மீது இந்தப் படம் பார்க்கும்போது வருகிறது. அவர் தன் அப்பா மாதிரி நடிக்கக் கற்றுக்கொண்டு, நிச்சயமாக சூர்யா தவிர்க்க முடியாத ஹீரோவாக வந்துவிடுவார்.” என்று பேசினார்.