
திருப்பூர் ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றின் இடைநிலைத் தொழிலாளி சாந்தகுமார். பணியிடத்தில் மேலாளரால் ஏற்படும் அவமானம், மனைவியின் வசை, வீட்டு உரிமையாளர் போலீஸில் கொடுக்கும் புகார் உள்பட பல அழுத்தங்கள் அவரைத் தாக்குகின்றன. அவற்றிலிருந்து தப்பிக்க, மதுவை நாடும் அவர், நிலைகொள்ளாத போதையில் செய்யும் செயல்கள், அவரின் அன்றைய இரவில் பல எதிர் விளைவுகளைக் கொண்டு வருகின்றன. அந்த இரவு முடியும்போது அவர் என்னவாகிறார் என்பது கதை.
கதை என்பதை விட, ஒரு சாமானியனின் போதை இரவில் அவன் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள் வழியாக அவனது குணமும் வாழ்க்கையும் சுயசரிதைபோல் விரித்துக் காட்டப்படுவதுதான் படம். கதை சொல்லலில், நம்பகமான காட்சிகளுடன் கூடிய தேர்ச்சிமிக்க திரைக்கதை உத்திகளும், ஒளிப்பதிவில் இரவில் விழித்திருக்கும் திருப்பூர் நகரத்தின் உள்ளோடிய முகமும், இசையில் தன்னிலை உணரும் ஒருவனின் விடுதலைக்கான ஏக்கமும் இயல்பாக இருப்பதால், ஒரு யதார்த்த சினிமாவாக இப்படம் உயர்ந்துவிடுகிறது.