
மகாராஷ்டிராவில் குறிப்பாக மும்பை, புனே போன்ற நகரங்களில் ஏராளமான பங்களாதேஷ் பிரஜைகள் சட்டவிரோதமாகக் குடியேறி கட்டுமானத்தொழில், தொழிற்சாலைகள், உணவகங்கள் போன்றவற்றில் வேலை செய்து வருகின்றனர்.
அவர்கள் தங்களை இந்தியர்கள் என்று நிரூபிக்க, போலியான ஆவணங்களைத் தாக்கல் செய்து தேவையான ஆவணங்களை வாங்கி விடுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அது போன்று சட்டவிரோதமாக மும்பைக்கு வந்த பங்களாதேஷைச் சேர்ந்த ஒருவர்தான் நடிகர் சைஃப் அலிகான் வீட்டிற்குள் புகுந்து திருட முயன்றதோடு நடிகரை பிளேடால் தாக்கி காயப்படுத்தினார்.
அவரை போலீஸார் தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். இதையடுத்து பங்களாதேஷ் பிரஜைகளின் வரவைக் கட்டுப்படுத்த மாநில அரசு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து இருக்கிறது.
வெளியிட்டுள்ள புதிய உத்தரவில், ”பங்களாதேஷ் பிரஜைகளைத் தொழில் நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள் யாராவது வேலைக்கு அமர்த்தி இருந்தால் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கருதி தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஒப்பந்தாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பல ஊடுருவல்காரர்களை கட்டுமான நிறுவனங்கள், சிறு மற்றும் பெரிய தொழில்கள், வர்த்தகர்கள் மற்றும் பிற பொருளாதார நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பிற்குத் தீங்கு விளைவிக்கும் என்பதை இந்த நிறுவனங்கள் புரிந்து கொள்ள தவறிவிடுகின்றன. சட்டவிரோதமாக வரும் பங்களாதேஷ் பிரஜைகள் அரசின் நலத்திட்டங்களையும் வாங்கிக்கொள்கின்றனர்.
அவர்கள் கொடுக்கும் ஆவணங்கள் உண்மையானதா என்பதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிபடுத்தவேண்டும்” என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற ஊடுருவல்காரர்கள் போலி ஆவணங்கள் பெற உதவி செய்யும் அதிகாரிகள் மீது கடும் நட்வடிக்கை எடுக்கப்படும்’ என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் மாநில உள்துறை இணையமைச்சர் யோகேஷ் கதம் சட்டமன்றத்தில் அளித்த பதிலில், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பில்டர்கள் பங்களாதேஷ் பிரஜைகளை வேலைக்கு அமர்த்தமாட்டோம் என்று எழுதி கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.