
கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத கட்சிகளை அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, பின் அங்கீகரிக்கப்படாமல் 2,800க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன.
நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் அங்கீகரிக்கப்படாத கட்சிகளைப் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை 345 அரசியல் கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாட்டின் சில கட்சிகளும் அடங்கும். தமிழ் மாநில கட்சி, மீனவ மக்கள் முன்னணி, காமராஜர் மக்கள் கட்சி, அப்பா அம்மா மக்கள் கழகம் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 24 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2019க்குப் பிறகு ஒரு தேர்தலில் கூட போட்டியிடாமலும், பதிவு செய்து அங்கீகரிக்கப்படாத கட்சிகள், அரசின் சலுகைகளை அனுபவித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இப்படி இருக்கும் கட்சிகளை தேர்தல் ஆணையப் பட்டியலிலிருந்து நீக்கம் செய்ய கேட்டு, அதற்கான பதிலைப் பெற்று 1 மாதத்திற்குள் பரிந்துரைக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.