
புதுச்சேரி: கட்சிக்குள் பதவிக்காக போட்டி நிலவும் சூழலில், புதுச்சேரி பாஜக அமைச்சர் சாய் ஜெ.சரவணன்குமார் மற்றும் பாஜக நியமன எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா செய்தனர். புதுச்சேரியில் 2021-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. தேஜக கூட்டணியின் புதுச்சேரி தலைவரான ரங்கசாமி முதல்வரானார். இரு கட்சிகளுக்கும் தலா இரு அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட்டன.
பாஜகவைச் சேர்ந்த செல்வம் பேரவைத் தலைவராகவும், அமைச்சர்களாக நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமார் ஆகியோரும் பொறுப்பேற்றனர். மேலும், பாஜகவைச் சேர்ந்த ராமலிங்கம், அசோக்பாபு, வெங்கடேசனுக்கு நியமன சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி வழங்கப்பட்டது.