
ஆன்மிக குரு, யோகா நிபுணர் மற்றும் எழுத்தாளர் என்று பன்முகம் கொண்ட குரு மித்ரேஷிவா எழுதியுள்ள பணவாசம், கருவிலிருந்து குருவரை, உனக்குள் ஒரு ரகசியம் ஆகிய நூல் வெளியீட்டு விழா சென்னை சர்.பிட்டி தியாகராஜர் அரங்கில் நடைபெற்றது.
பாரதி பாஸ்கர் பேச்சு
மேடையில் வீற்றிருக்கும் அனைத்து விருந்தினர்களையும் சுவாரசியமாக ரத்தின சுருக்குமாக அறிமுகப்படுத்தி தனது உரையை ஆரம்பித்த பாரதி பாஸ்கர் களைப்புடன் துவங்கும் திங்கள் காலையை துள்ளி குதித்து ஆரம்பிப்பது எப்படி என்ற மனநிலையை மாற்றி உருவாக்கும் முறையை தனக்கே உரிய பாணியில் கூறினார்.
லீன் இன் நூலை மேற்கோள் காட்டி பேசும்போது பல்வேறு நிலைகளில் ஏற்படும் பிம்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் விளக்கிப் பேசினார்.
“பள்ளிப்படிப்பில் ஒரு எதிர்பார்ப்பு கல்லூரியில் ஒரு எதிர்பார்ப்பு பட்டம் பெற்ற பிறகு ஒரு எதிர்பார்ப்பு என்று பிம்பங்கள் வயதுக்கு ஏற்றவாறு மாறிக் கொண்டே இருக்கிறது. கடைசியில் என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டால் என்ன வேலைக்கு போக போறேன் என்று எனக்கே தெரியவில்லை என்று சளைத்துக் கொள்வார்கள். பிம்பங்கள் மாறுவதற்கு காரணம் இருக்கும் கல்வி முறைதான் .
கல்வியானது கனவுகளை அழிக்கும் சாக்கு மூட்டையாக இல்லாமல் தீபத்தை தூண்டி விடுவதாக இருக்க வேண்டும்.” என்றார்.
“குரு இன்றி ஞானமர்க்கத்தின் ஒரு கதவும் திறக்காது”
சுதர்மம் தெரியாமல் மகிழ்ச்சியாக இருக்க முடியாது ..எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? வாழ்க்கையில் நான் மட்டும் ஏன் கஷ்டப்படுகிறேன் என்று நமக்கு இயலாத நிலையை புலம்பி கொண்டு இருக்காமல் சுதர்மம் தெரிந்து கொண்டால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

சும்மா இரு..சொல்லற இருத்தல்.. என்ற இரண்டு சொற்களுக்கும் இருக்கும் வித்தியாசத்தை சுவை பட விளக்கி கூறிய பாரதி பாஸ்கர் “குரு இன்றி ஞானமர்க்கத்தின் ஒரு கதவும் திறக்காது” என்றார். மொழி என்பது ஒரு வாகனம் அந்த வாகனத்தை ஏறி அறிவை அடைந்து அறிவை கடந்து செல்ல வேண்டும் என்றார்.
Guru Mithreshiva நிகழ்ச்சி
விகடன் பிரசுரம் வெளீயீடுகளான இந்தப் புத்தகங்களைப் பொருளாதார நிபுணர் நாகப்பன் , எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், இயக்குநர் லிங்குசாமி ஆகியோர் வெளியிட சி.கே .குமரவேல், ஜோதிடர் கே.பி . வித்யாதரன் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர் பெற்றுகொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.