
திருப்பூரைச் சேர்ந்தவர் முனிவேலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பங்குச்சந்தை முதலீடு தொடர்பான விளம்பரம் ஒன்று வந்துள்ளது.
அதற்குள் சென்ற முனிவேல், அதில் இணைக்கப்பட்ட வாட்ஸ் ஆஃப் லிங்க் மூலம் குழுவில் இணைந்தார். அந்தக் குழுவில் ஈரோட்டைச் சேர்ந்த நவனீஷ் என்பவர் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அதை உண்மையென நம்பி, பல தவணைகளாக ரூ. 22.25 லட்சம் வரை முனிவேல் முதலீடு செய்துள்ளார்.
முதலீட்டைத் திரும்ப பெற முயலும்போது, மேலும் பணத்தைச் செலுத்துமாறு நவனீஷ் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து முனிவேல் விசாரித்தபோது, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்துள்ளார்.
இதுதொடர்பாக திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீஸில் முனிவேல் புகார் அளித்தார். போலீஸார் நடத்திய விசாரணையில், முனிவேல் அனுப்பிய பணம் எலைட் எக்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தின் வங்கிக் கணக்குக்குச் சென்றிருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் பங்குதாரரான ஈரோட்டைச் சேர்ந்த நவனீஷ் கைது செய்யப்பட்டார். அவரது இரண்டு மொபைல் போன்கள், வங்கிக் கணக்கு ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “இந்த மோசடி குறித்து விசாரித்தபோது, டெலிகிராம் மூலம் அறிமுகமான மிஸ்டர் ஜீ மற்றும் இலங்கையில் வசிக்கும் நவனீஷின் மாமா சுதர்சன் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் நவனீஷ் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக நவனீஷ் குறிப்பிட்ட தொகையை கமிஷனாக பெற்றதும் தெரியவந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் வரும் பங்குசந்தை முதலீட்டுக்கான எந்த விளம்பரங்களையும் நம்பி பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்” என்றனர்.