
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் தனது மூன்றாவது மனைவியைக் கொன்றுவிட்டு 23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 75 வயது முதியவரை போலீஸார் தற்போது கைது செய்திருக்கின்றனர்.
போலீஸாரின் கூற்றின்படி, ஹனுமந்தப்பா என்று அறியப்படும் அந்த நபர் கடந்த 2002-ல் தனது மூன்றாவது மனைவி ரேணுகாமாவைக் கொலை செய்திருக்கிறார். மேலும், உடலை ஒரு பையில் அடைத்து அதை பேருந்தில் போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்.
இந்தக் கொலை நடந்த சமயத்தில் சம்பவம் நடந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையடுத்து, கங்காவதி டவுன் காவல் நிலையத்தில் இக்கொலை தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
போலீஸ் தரப்பிலிருந்து விசாரணை, தொடர் தேடுதல் வேட்டை ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், ஹனுமந்தப்பாவை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், ராய்ச்சூர் மாவட்டத்தின் மான்வி தாலுகாவிலுள்ள தனது சொந்த கிராமமான ஹலதால்லுக்கு ஹனுமந்தப்பா திரும்பியிருப்பதாக போலீஸுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.
அதன்படி, அக்கிராமத்துக்குச் சென்ற போலீஸார் ஹனுமந்தப்பாவை கைது செய்திருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, இதனை வருடங்கள் போலீஸிடமிருந்து தலைமறைவாக இருந்ததற்கு உள்ளூர் ஆதரவு ஏதேனும் இருந்ததா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மேலும், ஹனுமந்தப்பா விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.