• June 27, 2025
  • NewsEditor
  • 0

விருதுநகர் மாவட்டம், சாத்தூர், படந்தால் அரசு பள்ளியில் பயின்ற யோகேஸ்வரி. அவரது தாய் பட்டாசு ஆலை தொழிலாளி, தந்தை டீக்கடை தொழிலாளி. அவர்களின் மூன்றாவது பிள்ளையான யோகேஸ்வரி 125 செ.மீ மட்டுமே உயரம் கொண்ட ஒரு மாற்றுத் திறனாளி. அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று வந்த அவர், ஜேஇஇ தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்று, மும்பை ஐஐடியில் ஏரோநாட்டிக்கல் பிரிவை தேர்வு செய்துள்ளார்.

இன்றைய சூழ்நிலையில், ஜேஇஇ தேர்வுக்காக தனியார் பயிற்சி மையங்களில் பலரும் செலவு செய்யும் நிலையில், அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த யோகேஸ்வரி அரசு வழங்கிய 40 நாள் பயிற்சியை மட்டும் பெற்று இந்த இடத்தைப் பெற்றுள்ளார்.

யோகேஸ்வரி

யோகேஸ்வரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது, ஏழாம் வகுப்பு முதல் அறிவியலில் ஆர்வம் கொண்டு மருத்துவராக வேண்டும் என்றுதான் நினைத்து வந்தேன். ஆனால் ஆவரேஜாக பயிலும் மாணவி, ஆனாலும் தாய், தந்தையின் கடின உழைப்பை பார்த்து கல்வியில் சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு தோன்றியது. இதனால் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பயிற்சியைத் தீவிரமாக 40 நாள்கள் ஈரோட்டில் தங்கியிருந்து பயின்றேன். தமிழ் வழியில் பயின்ற எனக்கு ஆங்கிலத்தில் எல்லா பாடங்களையும் புரிந்து கொள்வது முதலில் கடினமாக இருந்தது. ஆனால் பயிற்சி மையத்தில் இருந்த ஆசிரியர்கள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தனர்.

யோகேஸ்வரி

உயரம் எனக்கு ஒரு போதும் தடையாக இருந்ததில்லை. எனக்கு 12 வயதாகும் போது தான் உயரம் குறைவாக இருக்கிறேன் என அறிந்துகொண்டோம்.

அரசு மருத்துவமனை, தனியார் சிகிச்சை மையங்கள் எனப் பல இடங்களில் மருத்துவம் பார்த்தோம். ஆனால் எனக்கு வந்துள்ள இந்த குறைபாடு அகோண்ட்ரோபிளாசியா அப்படின்னு சொன்னாங்க. இது எலும்பு வளர்ச்சியைப் பாதிக்கும் ஒரு மரபணுக் கோளாறுன்னு வேற சொன்னாங்க. ஆனால் அதெல்லாம் எனக்கு இது ஒரு குறையாகவே தெரியவில்லை.

படிப்பில் சாதித்து காட்ட வேண்டும். என்பதை ஒரே நோக்கமாக கொண்டு படித்தேன். இன்று மும்பை ஐஐடியில் நான் ஏரோநாட்டிக்கல் பிரிவை தேர்வு செய்தேன்.

படித்து முடித்த பிறகு ஐஎஸ்ஆர்ஓ-வில் பணியாற்ற வேண்டும் என்பது தான் எனது குறிக்கோள். அங்கு முதலில் தமிழ்நாட்டிற்கும், பின் நம் நாட்டிற்கும், ஏதாவது நல்லது செய்ய வேண்டும். ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் சாமானியர்களுக்காக நிறைய கண்டுபிடிப்புகளை தந்துள்ளார். அதே போல் நானும் என்னை போன்று சாமானியர்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும். இத்துடன் விண்வெளியில் இருந்து பூமியை பார்ப்பேன்.

நான் 12 ஆம் வகுப்பில் மிக கம்மியான மார்க்தான் எடுத்தேன். இதனால தனியார் கல்லூரியில் படிக்க நிறைய பணம் ஆகும்னு யோசிச்சோம். அப்பதான் சரியா ஜேஇஇ தேர்விற்கு ரிசல்ட் வந்தது. அதற்கப்புறம் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுக்கும் கடினமாக படித்து இந்திய அளவில் 75 -வது ரேங்க் எடுத்து வெற்றி பெற்றேன். இதனால் மும்பை ஐஐடியில் இடம் கிடைத்தது. அங்கும் படிப்பிற்கான முழு செலவையும் அரசு ஏற்கும் என மாவட்ட ஆட்சியர் சொன்னார்.

எப்படி ஜேஇஇ தேர்வுகளை படித்து தேர்ந்தேனோ அதேபோல் ஏரோநாட்டிக்கல் படிப்பையும் முதுகலை அளவில் படித்து முடிப்பேன்” என யோகேஸ்வரி கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *