• June 27, 2025
  • NewsEditor
  • 0

கொல்கத்தாவில் ஏற்கனவே கடந்த ஆண்டு ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் மேற்கு வங்க அரசியல் மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர்கள் நீதி வேண்டி பல மாதம் போராட்டம் நடத்தினர். இப்பிரச்னை சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. தற்போது மேலும் ஓர் அதிர்ச்சியளிக்கும் சம்பவமாக கொல்கத்தா சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் உள்ள தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரியில் இச்சம்பவம் நடந்துள்ளது. அம்மாணவி நேற்று முன் தினம் இரவு கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு அறையில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இக்குற்றத்தில் ஈடுபட்டதாக முன்னாள் மாணவர் மனோஜித் மிஸ்ரா(31), ஜைப் அகமத், பிரமித் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பா.ஜ.க வெளியிட்டுள்ள பதிவு

கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நான்கு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான செய்தி வெளியானவுடன் பா.ஜ.கவினர் குற்றவாளியை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுடன் சம்பந்தப்படுத்தி சமூக வலைதளத்தில் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மனோஜித்துடன் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் அபிஷேக் பானர்ஜி, மாநில அமைச்சர் சந்திரிமா, மம்தா பானர்ஜியின் மைத்துனியும், கவுன்சிலருமான கஜாரி பானர்ஜி ஆகியோர் இருக்கும் படங்களை பா.ஜ.க தலைவர் பிரதீப் பண்டாரி, ஐ.டி பிரிவு தலைவர் அமித் மால்வியா ஆகியோர் பகிர்ந்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ”மம்தா பானர்ஜி அரசு குற்றவாளிக்கு துணையாக இருக்கிறது. ஆர்.ஜி கர் மாணவி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோரை அமைதிபடுத்த மம்தா பானர்ஜி முயன்றார். இப்போது நடந்துள்ள குற்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினரே ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் எங்கு இருக்கிறார் என்பதை மறைத்துள்ளனர்” என்று பா.ஜ.க தலைவர் பிரதாப் பண்டாரி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இக்குற்றச்சாட்டுக்கு மம்தா பானர்ஜி அல்லது அவரது கட்சி சார்பாக இது வரை பதிலளிக்கவில்லை. இச்சம்பவத்தால் மேற்கு வங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் மம்தா பானர்ஜிக்கு இது புதிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *