மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பதவியேற்ற கடந்த 4 ஆண்டுகளில் 4-வது நபராக வனத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார் ராஜ கண்ணப்பன்.
மனித – வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் விவகாரத்தில் மிகவும் பொறுப்பற்ற முறையில் சர்ச்சை கருத்துக்களைப் பேசியதாக ராஜ கண்ணப்பனைக் கண்டித்து நீலகிரி மாவட்டம் கூடலூரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருக்கிறது.

அ.தி.மு.க-வைச் சேர்ந்த கூடலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க , பா.ஜ.க, நா.த.க, த.வெ.க, தே.மு.தி.க உள்ளிட்ட அரசியல் கட்சியினும் பங்கேற்றுள்ளனர். மேலும், மக்கள் நல அமைப்பினரும் முன்வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிண்ணனி குறித்து தெரிவித்த அரசியல் கட்சியினர், “வால்பாறையில் சிறுமியை சிறுத்தைத் தாக்கிக் கொன்ற துயரம் குறித்து கருத்து தெரிவித்திருந்த வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், ‘மனிதர்களை யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தாக்குவது வழக்கமான ஒன்றுதான். அதற்காகத்தான் இழப்பீடு தொகை வழங்குகிறோம்’ எனக் கொஞ்சமும் பொறுப்பற்ற முறையில் கூறியிருக்கிறார். அமைச்சர் பதவிக்கு இது கொஞ்சமும் அழகல்ல.

நாளுக்கு நாள் மனித – வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகரித்து வரும் இக்கட்டான சூழ்நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில் இருக்கும் அமைச்சரின் பேச்சு ஏற்புடையதாக இல்லை.
வனத்துறை அமைச்சரின் இந்தப் பொறுப்பற்ற பேச்சுக்குப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.
மன்னிப்பு கேட்க தவறும் பட்சத்தில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.