
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாத சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் கடந்த 16 ஆம் தேதி தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வரா பூஜையுடன் தொடங்கியது.
கடந்த 7 நாள்கள் தொடர்ந்து மங்கள இசையுடன் கணபதி ஹோமம், ஸ்கந்த ஹோமம், பிரம்மச்சாரி பூஜை, பூர்ணாகுதி தீபாராதனைகள் உள்ள பூஜைகள் நடைபெற்றன.
கும்பாபிஷேக தினமான இன்று அதிகாலை மங்கள இசையோடு, ஆறாம்கால யாக பூஜைகள், பூர்ணாகுதி தீபாராதனைகள் நடைபெற்று கடம் புறப்பாடு நடைபெற்று.
வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க ராஜகோபுரம் மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள விநாயகர், முருகன், நடராஜர், சண்டிகேஸ்வரர் கோபுர விமானங்களுக்கும் காலை 7.10 மணியளவில் புனித நீர் ஊற்றப்பட்ட தீபாராதனையுடன் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் பக்தர்களின் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அன்னதானத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாத சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்தி திருவீதி உலா நடைபெறுகிறது.