• June 27, 2025
  • NewsEditor
  • 0

பாலிவுட் நடிகர் சல்மான் கான் ராஜஸ்தானில் படப்பிடிப்புக்கு சென்றபோது அபூர்வ வகை மான்களை வேட்டையாடி சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார். அந்த அபூர்வ வகை மான்களை பிஷ்னோய் இன மக்கள் தெய்வமாக கருதுகின்றனர். இதனால் டெல்லியை சேர்ந்த மாஃபியா கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் நடிகர் சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறான். அதோடு கடந்த ஆண்டு மும்பையில் உள்ள சல்மான் கான் வீட்டின் மீது லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் துப்பாக்கியால் சுட்டனர். சல்மான் கான் மும்பை புறநகர் பகுதியில் இருக்கும் தனது பண்ணை வீட்டிற்கு சென்றபோது கொலை செய்யவும் திட்டமிட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவங்களை தொடர்ந்து நடிகர் சல்மான் கான் தனது பாதுகாப்பை தீவிரப்படுத்திக்கொண்டுள்ளார். மும்பை போலீஸாரும் சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளனர்.

அவரது வீட்டிற்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சல்மான் கான் தனது வீட்டு பால்கனிக்கு கூட குண்டு துளைக்காத கண்ணாடி மாட்டி இருக்கிறார். அதோடு சல்மான் கான் வெளியில் செல்லும்போது குண்டு துளைக்காத காரில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். படப்பிடிப்பு நடக்கும் இடத்திலும் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது. சல்மான் கான் சொந்தமாக பாதுகாவலர்களையும் வைத்திருக்கிறார். சல்மான் கான் தனது பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக புதிதாக குண்டு துளைக்காத கார் ஒன்றை விலைக்கு வாங்கி இருக்கிறார். Mercedes-Maybach GLS 600  என்ற அக்காரின் விலை ரூ.3.40 கோடியாகும். மணிக்கு 240 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இக்கார் தானியங்கி கியர் பாக்ஸ் கொண்டது ஆகும்.

கிரிக்கெட் அணியை வாங்கிய சல்மான் கான்

நடிகர் சல்மான் கான் கார் மட்டுமல்லாது சொந்தமாக கிரிக்கெட் அணி ஒன்றையும் விலைக்கு வாங்கி இருக்கிறார். ஐ.பி.எல் போன்று ISPL எனப்படும் indian street premier leagu என்ற புதிய கிரிக்கெட் பிரிவு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் டெல்லி அணியை சல்மான் கான் வாங்கி இருக்கிறார். சச்சின் தெண்டுல்கர் தலைமையில் இந்த ஐ.எஸ்.பி.எல் அணிகள் செயல்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக டென்னிஸ் பால் டி10 போட்டிகளை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் இப்போட்டிகள் நடத்தப்பட்டுவிட்டது. அடிமட்டத்தில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்ற நோக்கதில் இந்த ஐ.எஸ்.பி.எல் தொடங்கப்பட்டுள்ளது. டெல்லியை தொடர்ந்து அகமதாபாத்திற்கும் ஒரு அணி அறிவிக்கப்பட்டு அதன் உரிமையாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று ஐ.எஸ்.பி.எல் நிர்வாக கமிட்டி உறுப்பினர் அசிஷ் ஷெலார் தெரிவித்துள்ளார்.

நடிகர் சைஃப் அலிகான் மற்றும் அவரது மனைவி கரீனா கபூர் ஆகியோர் இணைந்து கொல்கத்தா அணியை வாங்கி இருக்கின்றனர். இதே போன்று ஹ்ரித்திக் ரோஷன் பெங்களூரு அணியையும், அமிதாப் பச்சன் மும்பை அணியையும் வாங்கி இருக்கின்றனர். நடிகர் சூர்யா சென்னை லயன்ஸ் அணியையும், ராம் சரண் ஐதராபாத் அணியையும், அக்‌ஷய் குமார் ஸ்ரீநகர் அணியையும் விலைக்கு வாங்கி இருக்கின்றனர்.

புதிய கிரிக்கெட் அணி வாங்கி இருப்பது குறித்து சல்மான் கான் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், ”இந்தியாவின் ஒவ்வொரு தெருவிலும் எதிரொலிக்கும் ஒரு இதயத்துடிப்பு கிரிக்கெட். அந்த ஆற்றல் மைதானத்தை அடையும் போது, ​​ஐஎஸ்பிஎல் போன்ற லீக்குகள் பிறக்கின்றன. நான் எப்போதும் விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகிறேன். இந்த தனித்துவமான லீக் இந்தியாவில் அடிமட்ட கிரிக்கெட்டை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், திறமையான வீரர்களுக்கு ஒரு மதிப்புமிக்க தளத்தை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதால் ஐஎஸ்பிஎல்-லில் சேருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *