
இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பறந்து போ’ திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
பெற்றோர் – பிள்ளைகளுக்கிடையான உறவை, அன்பை பேசும் இப்படத்தில் மிர்ச்சி சிவா, அஜூ வர்கீஸ், கிரேஸ் ஆண்டனி எனப் பலரும் நடித்திருக்கிறார்கள். சுதந்திரத்தை விரும்பும் குழந்தை, தனது பெற்றோரையும் சுதந்திரத்தை நோக்கி அழைத்துச் செல்லும் இலகுவான கதைக்களம் இது.
ராம் – யுவன் காம்போ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் முதலில் யுவன்தான் படம் முழுக்க இசை அமைக்க வேண்டியிருந்தது. ஆனால், யுவன் அந்த சமயத்தில் வேறு சில பெரிய படங்களில் பரபரப்பாக இருந்ததால், இப்படத்தின் பின்னணி இசையை மட்டும் அமைத்திருக்கிறார். பாடல்களை சந்தோஷ் தயாநிதி அமைத்திருக்கிறார்.
இதன் வெளியீட்டையொட்டி சிறப்புத் திரையிடலை படக்குழுவினர் ஏற்பாடு செய்து சினிமா துறையில் இருக்கும் பலருக்கும் இப்படத்தைத் திரையிட்டுக் காட்டி வருகின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசியிருக்கும் இயக்குநர் பாலா, “மாரி செல்வராஜ் தனது படம்போல இங்கும் அங்கும் அலைந்து இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க துடித்துக் கொண்டிருக்கிறார். இயக்குநர் ராமுக்கு இப்படியானவர்கள் கிடைத்ததில் மகிழ்ச்சி. இது நல்ல படம். இதை மக்களிடம் கொண்டு சேர்க்க நம்ம எல்லாரும் சேர்ந்து ஏதாவது பண்ணனும். இப்படத்தை எப்படியாவது மக்களிடம் கொண்டு சேர்த்துவிடுங்கள், விமர்சகர்களின் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன். ராம் மாதிரியான இயக்குநர் நம் தமிழ்நாட்டிற்கு வேண்டும்.” என்று உணர்ச்சிமிகுந்து பேசியிருக்கிறார்.