• June 26, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

மன்னிப்பாயா அம்மா! # உறவின் கடிதம்.

அம்மா,

உன்னைப் பற்றி எழுத வேண்டும் என்ற என் நீண்ட நாளைய எண்ணம் இன்று விகடனால் நிறைவேறியது.

அம்மா, உன் வாழ்க்கையில் கஷ்டங்களை மட்டுமே கொடுத்த அந்த இறைவன் மீது கூட எனக்கு கோபம் வரும். இளம் வயதில் பெற்றோர்களை இழந்து பெரிய குடும்பப் பொறுப்பை ஏற்றபோதே உன் கஷ்ட காலம் ஆரம்பித்து விட்டது. பிறகு திருமணம். .ஐந்து பெண்கள். ஒரு பிள்ளை . ஐந்து பெண்களை எப்படி கரையேற்றுவாய் என புகுந்த வீட்டினரின் ஏளனப் பேச்சுகள். ஆனால் நீ மிகவும் பொறுமைசாலி.. அமைதியுடன் சமாளிப்பாய்.

அப்பா ராணுவத்தில் பணிபுரிந்து பின் காவல்துறையில் சேர்ந்தார். வீட்டிலும் எல்லோரிடமும் அதே கெடுபிடிகள் தான்.. நீயும் எங்களுடன் சேர்ந்து அவரிடம் அடிகள் வாங்கியிருக்கிறாய். அப்பாவக்கு சினிமா பிடிக்காது. ஒரு முறை அப்பா ஊரில் இல்லாத போது பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் நீ பக்தி திரைப்படம் சென்றதை அறிந்தவர் உன்னை அடித்து இரவு முழுவதும் வெளியே நிற்க வைத்தார்..எங்களால் ஒன்றுமே செய்ய முடியாமல் இருந்ததை நினைத்து இப்போதும் வருந்துகிறோம்.

மேலும் எங்களை வளர்க்க நீ பட்ட சிரமங்கள், பணப்பற்றாக்குறை, உறவினர்களின் அவமதிப்பு, அவமானங்கள் என சொல்லிக் கொண்டே போகலாம். ரேஷன் அரிசியில் உள்ள புழு, பூச்சிகளை களைந்து விட்டு எங்களுக்கு சமைத்து தருவாய். நல்ல சாப்பாடு தர முடியவில்லையே என்ற உன் மன வேதனையை நாங்கள் அறிவோம்.

நீ தன்மானமிக்கவள். உறவினர் திருமணம் ஒன்றுக்கு எங்களை அழைத்துக்கொண்டு போனபோது மாமியாரால் அவமதிக்கப்பட்டாய். பிறகு எங்களை எந்தவொரு விசேஷங்களுக்கும் அழைத்து செல்வதை தவிர்த்து விட்டாய்.

அண்ணன் வேலைக்குப் போன பின் தான் நீ சற்று தலை நிமிர்ந்தாய்.. உன் விருப்பப்படி அண்ணனுக்கு உன் தம்பி மகளை திருமணம் செய்த பின் உன்னிடம் நிம்மதி தெரிந்தது. உன்னுடைய வளர்ப்பால், தியாகத்தால் நாங்கள் அனைவருமே நன்றாகப் படித்து நல்ல நிலைமைக்கு வந்தோம். .

என் திருமணத்திற்குப் பிறகு நான் எதிர்கொண்ட பிரச்னைகளுக்கு நேர்மறையான அறிவுரைகளைத் தருவாய். எவ்வாறு வாழ்க்கையில் அனுசரித்துப் போவது என்பது நீ கற்றுத் தந்த பாடம்

நான் உன்னிடம் நிறைய கோபமாகப் பேசியிருக்கிறேன். உன் மனதை பல சமயங்களில் புண்படுத்தியிருக்கிறேன். இப்போது இந்த வயதில் பல அனுபவ பாடங்களுக்குப் பிறகு உன்னை தினமும் நினைத்துக் கொள்கிறேன் 

நான் எடுத்தெறிந்து பேசிய பேச்சுக்கள்,மதிக்காமல் நடந்து கொண்டது, உன் இறுதி நாட்களில் உன்னோடு இல்லாமல் இருந்தது என நான் செய்த பல தவறுகளை மன்னிப்பாயா அம்மா!

உன் மகள் ரத்னா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *