
புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் ராஜீவ்காந்தி புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. அடிப்படை வசதிகள் குறைபாட்டால் இந்த புதிய பேருந்து நிலையத்தை முழுவதுமாக இடித்து, புதிதாக கட்ட தீர்மானிக்கப்பட்டது. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் இதற்கான பணி கடந்தாண்டு தொடங்கியது. ரூ.29.50 கோடி செலவில் இதற்கான பணிகள் நடந்தன. இதற்காக, கடலுார் சாலையில் உள்ள ஏஎப்டி மில் திடலுக்கு பேருந்து நிலையம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.
இதற்கிடையே பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நடந்து முடிந்தன. ஆனாலும், சில மாதங்களாக அதை திறக்காமல் அப்படியே வைத்திருந்தனர். “ஏஎப்டி மில் திடலில் இயங்கி வரும் தற்காலிக பேருந்து நிலையத்தில் வசதிகள் இல்லை; பணிகளை முடித்து புதிய பேருந்து நிலையத்தை ஏன் திறக்காமல் வைத்துள்ளீர்கள்?’’ என பல அமைப்புகள் கேள்வி எழுப்பின. பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு, கடந்த மே 2-ம்தேதி புதிய பொலிவுறு பேருந்து நிலைய முனையம்திறக்கப்பட்டது.