
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தின் பினாங்கோடு பகுதியில் உள்ள மக்கள் ஒரு பூனைக்குட்டியின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மூன்று நாள்களுக்கு முன்பு குரங்கு ஒன்று பினாங்கோடு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது.
வீட்டில் வளர்த்த 20 நாள்களேயான பூனை குட்டி ஒன்றை அந்த குரங்கு தூக்கிச் சென்றது. இதனால் இந்த குட்டியின் தாய் பூனை அழுகையுடன் சத்தத்தை எழுப்பி குடும்பத்தினரை எச்சரித்துள்ளது.
பூனை தொடர்ந்து சத்தம் போடுவதை குடும்பத்தினர்கள் கவனித்து வெளியில் வந்து பார்த்தபோது, குரங்கு கையில் அந்த பூனை குட்டி இருந்துள்ளது. அந்த குரங்கை பார்த்தப்படி தாய் பூனை அழுது சத்தமிட்டிருந்திருக்கிறது.
மக்கள் சுற்றி திரண்டதால், குரங்கு ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு நகரத் தொடங்கியது. ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு தாவும் குரங்கை பார்த்து தாய் பூனை சத்தமாக அழுது கொண்டிருந்திருக்கிறது.
பூனை குட்டியை மீட்க கிராம மக்கள் பல முயற்சிகளை செய்துள்ளனர். பசி மற்றும் மழையில் நனைந்ததால் பூனை குட்டி அழும் சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
உள்ளூர் தன்னார்வலர்கள் தலைமையில் மீட்பு முயற்சிகளும் மணிக்கணக்கில் நடந்துள்ளது.
ஆனால் குரங்கு மேலும் மேலும் கிளைகளை அடைந்ததால் அதனை பிடிக்க முடியவில்லை, பூனை குட்டியை மீட்க முடியவில்லை.
குடியிருப்பாளர்கள் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கிய போதிலும், குரங்கை அப்பகுதியில் காணவில்லை. எனினும் பூனை குட்டி திருப்பி வந்துவிடும் என்ற நம்பிக்கையில் கிராமவாசிகள் தற்போது காத்துக்கொண்டிருக்கின்றனர்.