
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ரூ.370 கோடியில் 33 கி.மீ. தூரத்துக்கு மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் முதற்கட்ட பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ‘திருநெல்வேலியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், மேற்கு புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும்’ என்று, திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இத்திட்டத்தின்படி, மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தாழையூத்து அருகே தொடங்கும் மேற்கு புறவழிச்சாலை, சங்கரன் கோவில் சாலை, தென்காசி சாலை, முக்கூடல் சாலை, அம்பாசமுத்திரம் சாலை மற்றும் கன்னியாகுமரி சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் ரூ.370 கோடி திட்ட மதிப்பீட்டில் 33 கி.மீ. தூரத்துக்கு 4 வழிச்சாலையாக அமைக்கப்படவுள்ளது.