• June 26, 2025
  • NewsEditor
  • 0

தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 31 வது வார்டில் உள்ளது செண்பகவள்ளி நகர். இப்பகுதியில் பாதாள சாக்கடை மெயின் குழாய் பதிக்கும் பணி கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்த பணிகள் இன்னும் முழுமையடையவில்லை என்கிறார்கள். இதற்கிடையே அப்பகுதியில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவதற்காக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடை பணி முழுமை அடையாததால் குழாயில் இருந்து அவ்வப்போது சாக்கடை நீர் வெளியேறி சாலையில் ஓடுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக மாநகராட்சி கூட்டத்தில் சம்பந்தப்பட்ட கவுன்சிலர்கள் கூறி வந்தனர்.

தஞ்சாவூர் மாநகராட்சி முன்பு போராட்டம்

ஆனாலும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 5ம் தேதி நடந்த மாநகராட்சி கூட்டத்திலும் 31-வது வார்டை சேர்ந்த பா.ஜ.க கவுன்சிலர் ஜெய்சதீஷ், செண்பகவள்ளி நகரில் வசிக்கும் 30-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் கேசவன் ஆகியோர் இது தொடர்பாக புகார் அளித்தனர். உடனடியாக சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் 20 நாள்களை கடந்தும், பாதாள சாக்கடை பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கவுன்சிலர் ஜெய்சதீஷ் தலைமையில், அ.தி.மு.க. கவுன்சிலர் கேசவன் அப்பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது மாநகராட்சியின் மெத்தனப்போக்கை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம், மாநகராட்சி அதிகாரிகள், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு வாரத்தில் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர்.

சாலை மறியல் போராட்டம்

அதன் பின்னர் போராட்டத்தை முடித்து கொண்டனர். இதனால், சுமார் அரைமணி நேரம் அந்த வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து பா.ஜ.க கவுன்சிலர் ஜெய்சதீஷ் கூறுகையில், “பாதாள சாக்கடை பணிகள் முறையாக நடைபெறாததால், நான்கு நாள்களுக்கு ஒரு முறை கழிவுநீர் சாலையில் வழிந்துதோடி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. பள்ளமான பகுதியில் இருந்து மேட்டு பகுதியை நோக்கி குழாயை தவறாக பதித்து இருப்பதால் இந்த பிரச்னை. இது தொடர்பாக பலமுறை மாநகராட்சியில் கூறியும், நடவடிக்கை இல்லை. ஒரு வாரத்திற்குள்ளாக பிரச்னையை தீர்க்காவிட்டால் மாநகராட்சிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்துவோம்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *