• June 26, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

  எனது இரண்டாம் தெய்வத்திற்கு அநேக கோடி வணக்கங்கள்

 தங்களுக்கு கனகாபிஷேகம் செய்வதற்கு உண்டான பாக்கியத்தை எனது பேரன் மித்ரன் ராக்கப்பன் வழியாக கொடுத்தமைக்கு அனைத்து தெய்வங்களுக்கும் எனது குடும்பத்தின் சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள்.

தன் ப்ரபெளத்தரனை பார்த்தவர்   ஸஹஸ்ர சந்திரதரிசன ப்ரபெளத்ர ஜனண சாந்தி ( கனகாபிஷேகம் ) செய்து கொண்டு பாபங்களிலிருந்து விடுபட்டு புண்யங்கள் பல பெற்று பின்னர் ஸ்வர்க்கத்தை அடைவர் என சுதந்திர சௌனகர் கூறுகிறார். 

இத்தருணத்தில் எனது கடந்த கால பாதைகளை நினைவு கூற விழைகிறேன். பிறப்பிலே தங்களுக்கும் உமையாள் தாயாருக்கும் புத்திரனாக பிறந்தாலும், சுவீகாரம் சென்ற வழியில் சிறிய தகப்பனார் ஆகி விட்டபடியால் பழனியப்பன் என்ற முருகன் நாமம் இடப்பட்டு தந்தைக்கு உபதேசம் செய்ய உகந்தவனாக என்னை தத்து கொடுத்து இந்த ஜென்மத்தின் பலன் பெற செய்தீர்கள்.

சிறு வயது முதலே தாய், தந்தையர் வழிபாட்டில் ஆரம்பித்து, தெய்வ வழிபாட்டிற்கு உண்டான ஸ்த்தோத்தரங்கள் தினமும் எங்கள் காதுகளில் விழ வைத்து, சிறுசேமிப்பிற்கு 8 வயதில் வங்கி கணக்கு துவக்கி ஒழக்கத்திற்கு வித்திட்டவர் தாங்கள்.

நாங்கள் வளர்ந்த சூழலை உற்று நோக்கினால்- கண்களுக்கு எப்பொழுதும் நற்செய்திகள் படும்படியான பதாதைகள் வீடு முழுக்க, காதுகளுக்குள் ரீங்காரமிடும் விநாயகர் அகவல், கந்தஷ்ஷடி, திருவாசகம், மங்களரூபினி, ஐகிரி நந்தினி  பாடல்கள், வயிற்றுக்கு ஐந்து வேளையும் வாய்க்கு ருசியான உணவு, உடல் வலிமைக்கு தினமும் மாலையிலும், விடுமுறையிலும் விளையாட அனுமதித்தது, மனதிற்கு சோர்வே இல்லாமல் அன்பும், பாசமும், கனிவும், கண்டிப்பும்  கொடுத்து செம்மைப் படுத்தியோடு மட்டுமல்லாமல் நாங்கள் விரும்பும் பாடத்தினை படிக்க அனுமதித்த பாங்கு எங்களை முழமனிதனாக ஆக்கியதோடல்லாமல் இறையுணர்வோடு தர்ம காரியங்கள் செய்யும்படி வழி காண்பித்து விட்டீர்கள்.

கடந்து வந்த பாதையினை பார்க்கும் பொழுது எங்களுக்கு தந்தையாய் இருந்ததை விட நண்பனாக, ஆசானாக, தெய்வ வழி காட்டிய குருவாக, குலம் தழைக்க பொது வாழ்வில் சேவகனாக, அனைத்திற்கும் மேல் ஒரு தலைவனுக்கு உரிய எடுத்துக் காட்டாய் வாழ்ந்து காட்டி வந்து உள்ளீர்கள். 

எங்களது தாயாரை இழந்த பின் இந்த 25 ஆண்டுகளாக எங்களுக்கு தாயுமானவனாய் இருந்து உள்ளீர்கள்.

அனைத்து நல்ல, கெட்ட விஷயங்களில் பகுத்தறிந்து, எங்கள் கருத்தறிந்து, உணர்வுகள் அறிந்து, சக மனித மரியாதையுடன் குடும்பத்தை கட்டுக்கோப்புடன் கொண்டு சென்று, அவ்வழியை என்னை பின் தொடர வைத்தீர்கள். நான் பல முறை கோபமடைந்து பேசிய பொழுதுகளில் என்னை உள்வாங்கி, எனது உணர்வுகளுக்கும், எனக்கும் உரிய இடமளித்து என்னை ஆராதித்துள்ளீர்கள்.

என்னை நான் உணர்ந்ததை காட்டிலும் தாங்கள் உணர்ந்த விதம் அலாதியானது. என்னை அனைத்து விதத்திலும் ஆராதித்த, அரவனைத்து, நெறிப்படுத்தி, கட்டுக்குள் கொண்டு செலுத்திய சக்தி மிக வியக்கத்தக்கது. 

 படிப்பு, பழக்கம், ஞானம் மூன்றுக்கும் முவ்வழி காட்டி என்னை நெறிப்படுத்தியப் பாங்கினை பரவசத்தோடு பார்க்கிறேன். நான் யார்? என்பதை பற்றி நான் ஆராய்ந்து கொண்டே வாழ்க்கையை நடத்துவேன். அந்த ஆராய்ச்சியில் நீங்கள் எனக்கு யார் ? என்ற கேள்வி எனக்குள் அடிக்கடி தோன்றி உங்களை ஆராய்ந்ததில் எனக்குள் கிடைத்த விடை பின் வருமாறு:

  1. தங்களின் உந்துதல் மூலமே மேல் கொணர்ந்த தந்தையாக!

  2. தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் என்ற மனப் பாங்குடன் வளர்த்து தோழன் ஆகவே பாவித்த உற்ற தோழனாக!

  3. கருத்து வேறுபாட்டில் தங்களை கடிந்து, காயப்படுத்தியும் எனது  கருத்துகளின் அறிவு செறிந்த விஷயங்களில் வியந்து அதை ஏற்று என்னை தந்தையாக பாவித்து தகப்பன் சாமி என்று அழைத்த தருணங்களில் எனக்கு மகனாக! 

  4. பொது வாழ்க்கையிலும், தர்மக்காரியங்களிலும் என்னை ஈடுபட வைத்த ஒரு போதி தர்மராக!

  5. மனிதன் அடுத்த நிலைக்கு செல்ல, நம்மைக் கொண்டு செலுத்த குருவே துணை என்ற மெய்யுணர்ந்து எனக்கும், நம் குடும்பத்திற்கும் குருவை காட்டிய குருவாக!

  6. தாயை இழந்து தத்தளிக்கும் போது அந்த சோகமே எங்களிடம் படரவிடாமல், எங்களுக்கும் பாரமாய் இல்லாமல், சரியான தூரத்தில் இருந்து எங்களை கொண்டு செலுத்திய அம்மையப்பனாக!

  7. என்னுடைய எல்லா ஏற்ற, இறக்கங்களிலும் எனக்கு உறுதுணையாக, என்னை காப்பவராக கடவுளாக!

இதில் எது என்று கூறுவேன் ? ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாக கூறுவேன் ஏழுப்பிறப்பிலும்  நீயே எனக்கு அனைத்துமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன். நம் சந்ததி தழைக்க ஒரு புரட்சியை நம் குடும்பத்தில் வித்திட்ட தங்களின் வாழ்நாளில் எனது வாழ்வினை காணிக்கை ஆக்குகிறேன்.

                      வாழ்க நீவிர் பல்லாண்டு 

அன்புடன் 

 ராக்கப்பன் சிதம்பரம் 

கோட்டையூர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *