• June 26, 2025
  • NewsEditor
  • 0

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22), மதுரையில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டவர்களின் முன்னிலையில், பெரியார், அண்ணாவை விமர்சித்து வீடியோ ஒன்று திரையிடப்பட்டது.

இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எதிர்வினையாற்றவில்லை என்று பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு குரல் எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டிருப்பதாவது…

கருணாநிதி – அண்ணா

“நான்காண்டுகள் ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதலமைச்சர், போட்டோஷூட் மேடை போட்டு – அரசு விழா என்ற பெயரில் அரசியல் பேசுகிறார்,

அ.இ.அ.தி.மு.க-வைப் பற்றியே புலம்பிக் கொண்டிருக்கிறார்.

அந்த வரிசையில், இன்று திருப்பத்தூரில் பேசியுள்ள பொம்மை முதலமைச்சர், “அண்ணா பெயரை அதிமுக அடமானம் வைத்துவிட்டது” என்கிறார்.

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கும், திமுக-வுக்கும் கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா?

“அண்ணா- இதய மன்னா” என்று கண்ணீர் வடித்த கையோடு அவர் கொள்கைகளை குழி தோண்டி புதைத்து, அண்ணாவின் கட்சியையும், ஆட்சியையும் கபளீகரம் செய்து, குடும்பக் கொள்ளையின் கூடாரமாக திமுக-வை கருணாநிதி மாற்றியதன் விளைவாக, அண்ணாவின் கொள்கை விழுமியங்களை நெஞ்சில் ஏந்திய அவரின் இதயக்கனி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக.

ஒருநாள், ஒரு நொடி கூட, எங்கள் பெயரிலும், கொடியிலும் மட்டுமல்ல, எங்கள் குருதியிலும் குடியிருக்கும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களை விட்டுக்கொடுக்க மாட்டோம்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

அண்ணாவின் கொள்கைகளுக்கு மாறாக, குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு, கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் பொம்மை முதல்வர் ஸ்டாலின் எல்லாம் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை!

இன்று வானத்திற்கும் பூமிக்கும் முழங்கும் ஸ்டாலினுக்கு, 1999- 2004 காலத்தில், மத்தியில் பதவி சுகத்தை அனுபவிக்கும் போதெல்லாம் தெரியாதா?

யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்?

கச்சத்தீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டை, அதன் உரிமைகளை அடகு வைத்ததும், வைக்கத் துணிவதும் திமுக தான்!

தன்மானமிக்க தமிழ்நாட்டு மக்கள், பகல்வேஷக் கட்சியான திமுக-வை 2026ல் நிச்சயம் விரட்டியடிப்பார்கள்!

திமுக-வால் பறிபோன தமிழ்நாட்டின் அமைதி, வளம், வளர்ச்சி, மாநில உரிமை என அனைத்தையும் நான் மீட்டுத் தருவேன்!

இதுவே, தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளிக்கும் 2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *